படிச்சவர்ன்னு நினைச்சேன்.. அங்க போய் புத்தி தெளிஞ்சுக்கோங்க.. செல்லூர் ராஜுக்கு செந்தில்பாலாஜி பதிலடி.!
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நோபல் பரிசு அளிக்க வேண்டும் என்று கலாய்த்த மாஜி அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு செந்தில்பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.
அணில்களால் ஏற்படும் மின் தடை உலக அளவில் மின் வாரியங்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று என்று மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியிருந்தார். இதை பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பலரும் சமூக வலைத்தளத்தில் விமர்சித்தனர். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செந்தில் பாலாஜியின் கருத்து பற்றி கிண்டலடித்தார். “அணிலால் மின்தடை ஏற்படுவதாக கண்டுபிடித்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு தர வேண்டும். செந்தில் பாலாஜியின் கண்டுபிடிப்பால் நல்லவேளை நான் தப்பித்து விட்டேன். எங்கள் ஆட்சியில் வெளிநாடு சென்ற அணில்கள் தற்போது மின்கம்பிகளில் சென்று கொண்டிருக்கின்றன” என்று சீண்டியிருந்தார்.
இந்நிலையில் செல்லூர் ராஜூக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்திருக்கிறார். இதுதொடர்பாக செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஆலங்குளம் துணை மின் நிலையத்து மின் பிரச்சினைகளுக்கு அணில்கள் காரணமென, 2020ல் மதுரை உயர் நீதிமன்றத்தில் அப்போதைய அதிமுக அரசு அளித்த விளக்கம் இது. பார்க்க படித்தவர் போலிருக்கும் @SellurKRajuoffl இதைப்பற்றி @PThangamanioffl யிடமோ உயர் நீதிமன்றத்திடமோ கேட்டு புத்தி தெளிய வேண்டுகிறேன்” என்று பதிவிட்டதோடு, நீதிமன்றத்தில் அளித்த விளக்கத்தையும் செந்தில்பாலாஜி இணைத்துள்ளார்.