வகுப்பறைகளை "கட்" அடித்து இருக்கிறேன் என்றும், ஆனால் புத்தக வாசிப்பை கைவிட்டதே இல்லை என்றும் நிதி அமைச்சர்  பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.  

வகுப்பறைகளை "கட்" அடித்து இருக்கிறேன் என்றும், ஆனால் புத்தக வாசிப்பை கைவிட்டதே இல்லை என்றும் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள மதுரை மாநாட்டு மையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பாக ”புத்தகத் திருவிழா – 2022 நடைபெற்று வருகிறது. அதில் நிதி அமைச்சர் பிடிஆர் கலந்து கொண்டு பேருரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கைகளான சுயமரியாதை, சமூகநீதி, சம உரிமை, எல்லோர்க்கும் கல்வி, எல்லோர்க்கும் சம வாய்ப்பு என்ற அடிப்படையில் மக்கள் நலனை தலையாய கடமையாகக் கொண்டு அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். 

அந்த வகையில், சென்னையில் மட்டுமல்லாது தமிழகத்தின் பிற பகுதிகளிலும் அரசு நிதியுதவியுடன் புத்தகத் திருவிழாக்கள் நடத்திட வேண்டுமென மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (BAPASI) மூலம் நடத்தப்பட்டு வந்த புத்தகக் கண்காட்சிகள் அரசு அமைப்புகளின் ஒருங்கிணைப்போடு அரசு நிதியுதவியுடள் சிறப்பாக நடத்தப்படுகிறது.

மதுரையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நடத்தப்படும் இந்த புத்தகத் திருவிழா குறுகிய காலத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொண்ட அனைத்து அலுவலர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். புத்தக வாசிப்பு என்பது மிக அற்புதமான பழக்கம். பள்ளி கல்லூரி காலங்களில் வகுப்பறைகளை கட்டடித்திருக்கிறேன், ஆனால் புத்தக வாசிப்பு பழக்கத்தை மட்டும் கைவிட்டதே இல்லை. இரண்டு புத்தகங்களையாவது படித்து விடுவேன். கடந்த முறை புத்தக கண்காட்சி நடைபெற்ற போது 50க்கும் மேற்பட்ட புத்தகங்களை விரும்பி வாங்கினேன். மறுபடியும் இந்த கண்காட்சியினை விரிவாக பார்வையிட்டு புத்தகங்களை வாங்கிட ஆவலாக உள்ளேன் என சுவாரசியமாக பேசினார். 

பாடப்புத்தகங்களை தாண்டி பிற துறை சார்ந்த நூல்களை வாசிப்பதன் மூலம் உலக நடப்புகள், அரசியல் நிகழ்வுகள், பொருளாதார மாற்றங்கள் உள்ளிட்ட அனைத்த விதமான அரிய தகவல்களை கற்றறிந்து பயன்பெற முடியும். அந்த வகையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நடத்தப்படும் இந்த புத்தகத் திருவிழாவை பொதுமக்கள், இளைஞகள், மாணவ, மாணவியர்கள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தெரிவித்தார்.