Seeman : நான் அவரைப் பார்த்து அரசியலுக்கு வந்தவன்.. எனக்கு திமிர் அதிகம்... சண்டை செய்வேன்.. சீறும் சீமான்.!
நீங்கள் எல்லாம் எம்.ஜி.ஆர்., கருணாநிதியைப் பார்த்து அரசியல் செய்ய வந்தீர்கள். ஆனால், நான் அப்படியல்ல. பிரபாகரனைப் பார்த்து அரசியல் செய்ய வந்தவன்.
தம்பி இயக்குநர் வெற்றிமாறனின் வடசென்னை படத்தில் வரும் வசனம் போல நான் சண்டை செய்கிறேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழக சிறைச்சாலைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சிறைவாசிகளை விடுவிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியினர் பல மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். நாகப்பட்டினத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்க அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நாகை வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். நாம் தமிழர் கட்சின் நடத்தும் ஆர்ப்பாட்டங்களில் திமுகவினர் தொடர்ந்து தாக்குதல் நடப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த சீமான், “'திமுகவினர் நடத்தும் தாக்குதலை நாங்கள் வரவேற்கிறோம். அதை அவர்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் விரும்புகிறோம்.
என் தம்பி வெற்றிமாறன் இயக்கிய வடசென்னைப் படத்தில் ஒரு வசனம் வரும். “இது என் நாடு, என் நிலம், அதை பாதுகாக்க சண்டை செய்யணும் இல்லையா? அதான் நான் சண்டை செய்கிறேன். பிரபாகரனின் பிள்ளைகள் இதுபோன்ற தாக்குதல்களுக்கு எல்லாம் பயப்பட மாட்டார்கள். நீங்கள் எல்லாம் எம்.ஜி.ஆர்., கருணாநிதியைப் பார்த்து அரசியல் செய்ய வந்தீர்கள். ஆனால், நான் அப்படியல்ல. பிரபாகரனைப் பார்த்து அரசியல் செய்ய வந்தவன். அதனால், எனக்கு இன்னும் கூடுதல் திமிர் இருக்கும். திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது என்ன சொல்லியதோ, அதைத்தான் நாங்கள் இப்போது செய்யச் சொல்லி கேட்கிறோம்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை பெற்ற முஸ்லீம் சிறைக் கைதிகள் குறித்து மு.க. ஸ்டாலினே பேசியிருக்கிறார். சிறைகளில் வாடும் அப்பாவி இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய எனக்கு வாக்குத் தாருங்கள் என்றும் பேசியுள்ளார். அதை ஏற்று இஸ்லாமியர்கள் திமுகவுக்கு வாக்குகளை அளித்துள்ளனர். அதனால், விடுதலை செய்யுங்கள் என்று நாங்கள் கேட்கிறோம்” என்று சீமான் தெரிவித்தார்.