1996-ல் கருணாநிதி முதல்வராக நான்தான் காரணம்... கொளுத்திப்போட்ட சரத்குமார்..!
கடந்த 1996-ஆம் ஆண்டில் திமுக- தமாகா கூட்டணி வெற்றி பெற்றதற்கு நான்தான் முதல் காரணம். அப்போது தொடர்ந்து 40 நாட்கள் நான் அந்தக் கூட்டணிக்குப் பிரசாரம் செய்து அவர்களை வெற்றி பெறச் செய்தேன் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் ஜோசப்பை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் சரத்குமார் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “கமல்ஹாசன் தன்னுடைய உழைப்பின் மூலம் வெற்றி பெற்றவர். அவர் ரசிகர் மன்றம் தொடங்கிய காலத்திலிருந்தே மக்களுக்குச் சேவை செய்துவருகிறார். மேலும் மக்கள் சேவை செய்ய அரசியல் அதிகாரமும் வேண்டும் என்பதற்காகப் புதிதாகக் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடுகிறார்.
கடந்த 1996-ஆம் ஆண்டில் திமுக- தமாகா கூட்டணி வெற்றி பெற்றதற்கு நான்தான் முதல் காரணம். அப்போது தொடர்ந்து 40 நாட்கள் நான் அந்தக் கூட்டணிக்குப் பிரசாரம் செய்து அவர்களை வெற்றி பெறச் செய்தேன். தற்போது புதிய மாற்றத்தை உருவாக்குவதற்காக ஒத்த கருத்துடையவர்களால் எங்கள் கூட்டணி உருவாகியுள்ளது. நாங்கள் பல நல்ல திட்டங்களை மக்களுக்காக வைத்திருக்கிறோம். மக்களுக்குப் பணம் கொடுத்தால் போதும், வாக்குகளை அள்ளி ஜெயித்துவிடலாம் என எண்ணுகின்றனர்.
நான் உங்கள் காலில் விழுந்து கெஞ்சிக் கேட்கிறேன். வாக்குக்குக் கொடுக்கும் பணத்தைத் தூக்கி எறியுங்கள். உழைத்துச் சம்பாதிக்கும் பணத்தில் கிடைக்கும் மகிழ்ச்சி வேறு எதிலும் கிடைக்காது. மு.க.ஸ்டாலின் முதல்வர் கனவு காண்கிறார். அவருடைய மகன் காவல்துறையினரையே எச்சரிக்கிறார். அவர்கள் நாளை ஆட்சிக்கு வந்தால் என்னவாகும் என்பதைச் சிந்தித்து பாருங்கள். எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்” என்று சரத்குமார் பேசினார்.