சசிகலாவிடம் இருந்து சத்யநாராயணா ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியதற்கு ஆதராம் இருக்கு..! தெறிக்கவிடும் ரூபா..!
சசிகலாவிடமிருந்து சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணா 2 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியது உண்மைதான் எனவும் தன் மீதான மான நஷ்ட வழக்கை சட்டரீதியாக சந்திக்க தயாராக உள்ளதாகவும் கர்நாடக சிறைத்துறை முன்னாள் டிஐஜி ரூபா தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்துவரும் சசிகலா, சிறையில் சொகுசாக வாழ்வதாகவும் அதற்காக சிறைத்துறை டிஜிபி சத்யநாராயண ராவ் சசிகலாவிடமிருந்து 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளதாகவும் சிறைத்துறை டிஐஜி ரூபா பரபரப்பு புகார் அளித்தார்.
கடந்த ஜூலை மாதம் சிறைத்துறை டிஐஜி ரூபா, சசிகலா, அப்துல் கரீம் தெல்கி உள்ளிட்ட கைதிகள் சிறையில் சிறப்பு சலுகைகளை அனுபவித்து வருகின்றனர். இதற்காக சிறைத் துறை டிஜிபி சத்தியநாராயண ராவ் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சசிகலா தரப்பில் ரூ.2 கோடி வரை லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது என குற்றம்சாட்டினார்.
இதையடுத்து ரூபா, பணியிட மாற்றம் செய்யப்பட்டதோடு அவர் மீது சத்யநாராயண ராவ் நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.
ரூபாவின் குற்றச்சாட்டு தொடர்பாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையிலான உயர்மட்ட குழு, கடந்த 3 மாதங்களாக சிறை அதிகாரிகள், பாதிக்கப்பட்ட கைதிகள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து வினய் குமார் அண்மையில் 300 பக்க அளவிலான அறிக்கையை கர்நாடக அரசிடம் தாக்கல் செய்தார்.
அதில், சிறையில் சசிகலா, தெல்கி உள்ளிட்ட விஐபி கைதிகள் சிறப்பு சலுகைகளை அனுபவித்தது உண்மைதான். சசிகலாவுக்காக அதிகாரிகள் 5 அறைகளை ஒதுக்கியுள்ளனர். சிறையில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட உணவையே சசிகலா சாப்பிட்டுள்ளார். சசிகலாவுக்கு உதவுவதற்காக உதவியாளர்கள், வரவேற்பு அறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருந்தன. சிறையில் அவர் சீருடை அணியவில்லை என்றும் தெரியவந்துள்ளது. எனவே கடமையை செய்ய தவறிய சிறைத்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளார்.
இந்நிலையில், பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய ரூபா, சத்யநாரயண ராவ் சசிகலாவிடமிருந்து 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றது உண்மைதான். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. என் மீதான மான நஷ்ட வழக்கை சட்டரீதியாக சந்திப்பேன் என தெரிவித்துள்ளார்.