I am not supporting dinakaran in rk nagar by election said vishal
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாரையும் ஆதரிக்கவில்லை எனவும் தன்னுடைய அடுத்தகட்ட அரசியல் நகர்வை விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் விஷால் தெரிவித்திருக்கிறார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் விஷாலின் வேட்புமனு பலதரப்பட்ட சர்ச்சைகளுக்குப் பிறகு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து அவர், தினகரனுக்கு ஆதரவு தெரிவித்ததாகக் கூறி விஷால் தினகரனுடன் உள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
எனவே அதை தெளிவுபடுத்தும் வகையில், தான் யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை என விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாக விஷால் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நான் போட்டியிட மனு தாக்கல் செய்தது எனது சுயசிந்தனையின் உந்துதலால் எடுத்த முடிவே. ஆர்கே நகர் மக்களுக்கு மக்கள் பணியாற்றவே இந்த முடிவை எடுத்தேன். ஆனால் ஆதிக்க அரசியல் சக்திகளால் ஜனநாயகம் சிதைக்கப்பட்டு என் மனு நிராகரிக்கப்பட்டது. எனக்கு நேர்ந்த அநீதிக்கு மக்கள் மன்றமே சாட்சி. ஆர்கே நகரில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டாலும், என்னுடைய மக்கள் பணிகளும் ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் போராட்டமும் தொடரும்.
நான் சிலரை ஆதரிப்பதாக செய்தி பரப்பப்படுகிறது. நான் யாரையும் ஆதரிப்பதாக இதுவரை சொல்லவில்லை. அப்படி ஒரு முடிவை எடுக்கவே இல்லை. எனது போராட்டத்தில் என்னுடன் துணை நின்ற எனது ரசிகர்கள், பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். அதேபோல் எனக்காகவும் நீதிக்காகவும் குரல் கொடுத்த அனைத்து தலைவர்களுக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். என்னுடைய அடுத்தகட்ட அரசியல் நகர்வை விரைவில் அறிவிப்பேன்.
இவ்வாறு விஷால் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
