நான் இந்து மத விரோதி இல்லை... நான் நாத்திகனும் இல்லை... அலறும் கமல்!
நான் ஒன்றும் இந்து மத விரோதி இல்லை, என்னை இந்து மத விரோதி என்னை தற்போதும் விமர்சிக்கின்றனர் என்று நடிகர் கமல்ஹாசன் வருத்தப் பட்டுக் கூறினார்.
நடிகர் கமலஹாசன் இன்று தனது 63ஆவது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இதை அடுத்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்து, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் குறித்தும், அண்மைக் காலமாக அவர் மீது தொடுக்கப்படும் விமர்சனங்கள் குறித்தும் கேள்வி எழுப்பப் பட்டது. குறிப்பாக, அண்மையில் அவர் வார இதழில் எழுதி வரும் தொடர் கட்டுரையில் குறிப்பிட்ட, இந்து மதத்திலும் தீவிரவாதிகள் உள்ளனர் என்ற கருத்துக்கு எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்து கேள்வி எழுப்பப் பட்டது.
அதற்கு பதிலளித்த கமல், நான் நாத்திகனுமில்லை, இந்து மத விரோதியு மில்லை, பகுத்தறிவாளன் என்று பதிலளித்தார்.
இந்த விவகாரத்தில் அவர் அளித்த பதில்...
இந்து பயங்கரவாதம் குறித்த எனது கருத்துக்கு, என் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கை, உண்மையை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டுமோ, தண்டனை கொடுத்தால் எப்படி எதிர்கொள்ள வேண்டுமோ அவ்வாறு எதிர்கொள்வேன்.
இந்த அரங்கத்தில் எத்தனை இந்துக்கள் இருக்கிறார்கள் என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. இந்தியாவில் எத்தனை இந்துக்கள் உள்ளார்கள் என்பது பற்றியும் எனக்குக் கவலையில்லை. எனது குடும்பத்தில் இந்துக்கள் உள்ளார்கள் என்பதை கவனிக்க வேண்டும். அவர்கள் மனதைப் புண்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் அன்பு என்ற ஆயுதத்தைத் தர மறுத்துவிட்டால், நான் மண்டியிட்டு அழ ஆரம்பித்து விடுவேன்.
ஒரே தேடலில் மாற்றுக் கருத்தைத் தேடி நான் பயணம் செய்கிறேன். என் மீதான விமர்சனத்திற்கு நான் பதில் சொன்னதில்லை; அதற்காகக் கோபித்ததும் இல்லை. நல்ல விமர்சனத்தை அடுத்த படத்தில் திருத்தி கொள்வேன். இது முக்கியமான விஷயம். இதனை அனைத்து இந்துக்களும் புரிந்துகொள்ள வேண்டும்.
எந்த மதமாக இருந்தாலும் வன்முறையில் ஈடுபடக் கூடாது என்பதுதான் என் தாழ்மையான வேண்டுகோள். செய்யாதீர்கள் என உரத்த குரலில் சொல்கிறேன். இது கிறிஸ்துவர்கள், இந்துக்களுக்கும் பொருந்தும். நான்,' டெரர்' என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. வன்முறை இல்லை என்று யாரும் சொல்லிவிட முடியாது; அது உள்ளது.
பிராமண சமுதாயத்தைத் தேடி நான் சென்றது இல்லை. என்னுடைய நண்பர்கள் அனைத்து சமுதாயத்திலும் இருக்கின்றனர. என்னை நாத்திகன் என்று அழைப்பதை நான் ஏற்கவில்லை. நான் பகுத்தறிவாளன்.
நான் பிறந்த குலத்திலிருந்து விலகி வந்தவன். என்னை இப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள். இந்துக்களைப் புண்படுத்த வேண்டும் என்பது எனது நோக்கமல்ல. என்னை இந்து மத விரோதி என்று தற்போதும் விமர்சிக்கின்றனர். நான் இந்து மத விரோதி இல்லை. பிராமணர்களும் ஏற்க வேண்டும். அல்லாதவர்களும் ஏற்க வேண்டும். அதுதான் என் எண்ணம் என்று கூறியுள்ளார் கமல்ஹாசன்.
எந்த மதமாக இருந்தாலும் வன்முறையில் ஈடுபடக் கூடாது என்று இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் அறிவுரை கூறிய கமல்ஹாசன், விஸ்வரூபத்தால் விஸ்வரூபம் எடுத்த அனுபவத்தை மனதில் கொண்டு, அதற்குக் காரணமானவர்களுக்கு அறிவுரை ஏதும் கொடுக்கவில்லை என்றே தோன்றுகிறது. தன்னை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் கமல், மற்றவர் மனம் புண்படும் வகையில் தோன்றியதைக் கூறிவிட்டு, பின்னர் என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறுவதும் சற்றே விந்தையானதுதான்..!