மு.க.ஸ்டாலினுக்கு அடுத்து நான்தான்... உள்ளாட்சி தேர்தலில் சர்வாதிகாரியாக செயல்படுவேன்... துரைமுருகன் ஆத்திரம்!
வெளிப்படையாக துரைமுருகன் மிரட்டும் தொனியில் பேசி வருவதால் வேலூர் பகுதியிலுள்ள உடன்பிறப்புகள் கலக்கத்தில் உள்ளனர்.
சட்டபமன்றத் தேர்தலில் தனக்கு எதிராக திமுகவினரே சதி செய்ததாகவும், கடவுள் தான் என்னைக் காப்பாற்றினார் எனவும் அதிர்ச்சியை கிளப்பிய அதிமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், உள்ளாட்சி தேர்தலில் நான் சர்வாதிகாரியாக செயல்படுவேன் எனத் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம், திருவலத்தில் இதுகுறித்து பேசிய அவர், ’’தற்போது நாம் ஆளும் கட்சி முதல்வருக்கு அடுத்து நான் தான். என்ன வேண்டுமானாலும் தொகுதிக்கு என்னால் செய்ய முடியும். இந்த திட்டத்தை விரைவில் நிறைவேற்றுவேன். காட்பாடி தொகுதியில் குறைந்த ஓட்டுக்கள் நான் வாங்கியதற்கு தி.மு.க., வினர் தான் காரணம்.
காட்பாடி வரலாற்றிலேயே முதன் முறையாக எதிர் கட்சிக்காரர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு வேலை செய்யாமல் தி.மு.க.,வினர் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டனர். முதல்வர் ஸ்டாலின் உத்தரவுபடி எடுத்த சி.ஐ.டி., ரிப்போர்டில் யார், யார் எதிர்கட்சி வேட்பாளர்களிடம் பேசினார்கள், பணம் வாங்கினார்கள் என்பது தெரிந்து விட்டது. ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மன்னித்து விட்டேன். இந்த துரோகிகள் இனிமேலாவது திருந்தி அடுத்த முறை ஒழுங்காக வேலை செய்வார்கள் என நம்புகிறேன். வரும் உள்ளாட்சி தேர்தலில் நான் சர்வாதிகாரியாக செயல்படுவேன்’’ எனத் தெரிவித்துள்ளார். இப்படி வெளிப்படையாக துரைமுருகன் மிரட்டும் தொனியில் பேசி வருவதால் வேலூர் பகுதியிலுள்ள உடன்பிறப்புகள் கலக்கத்தில் உள்ளனர்.