தெர்மகோல் விஞ்ஞானியாக நான் உருவெடுத்தது எப்படி..? அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடி விளக்கம்..!
என்னை அனைவரும் தெர்மாகோல் விஞ்ஞானி என கூறுகின்றனர். இந்த தெர்மாகோல் ஐடியா எனக்கு தோன்றியது அல்ல.
மதுரை ஸ்மார்ட் சிட்டி பணிகளில் ஊழல் நடைபெற்றதை நிரூபித்தால் பொது வாழ்க்கையில் இருந்து விலக தயார் எனக் கூறிய அமைச்சர் செல்லூர் ராஜு, தான் தெர்மகோல் விஞ்ஞானி ஆனது எப்படி என விளக்கமளித்துள்ளார்.
வைகை அணையில் நீர் ஆவியாவதை தடுக்க சில ஆண்டுகளுக்கு முன் அமைச்சர் செல்லூர் ராஜூ, தெர்மாகோலை மிதக்க விட்டார். இது பெரும் சர்ச்சையானது. இதற்கு பிறகு அமைச்சர் செல்லூர் ராஜூ ‘‘தெர்மாகோல் விஞ்ஞானி’’என சமூக வலைத்தளங்களில் கிண்டலடிக்கப்பட்டார். இந்த சர்ச்சை இதுவரை ஓய்ந்தபாடில்லை. இந்நிலையில் மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூரில் நடைபெற்ற அரசு விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார். விழாவில் பேசிய அவர்,‘‘என்னை அனைவரும் தெர்மாகோல் விஞ்ஞானி என கூறுகின்றனர். இந்த தெர்மாகோல் ஐடியா எனக்கு தோன்றியது அல்ல. பல நாடுகளில் நீர் ஆவியாவதை தடுக்க அணைகள், ஏரிகளில் தெர்மாகோல் பயன்படுத்துவதாக பொறியாளர்கள், ஆட்சியர் ஆகியோர் கூறினர். அதைத்தான் நான் செய்தேன். இது பெரிய விஷயமா?’’ என கேள்வி எழுப்பினார்.