இந்து மதத்தை வைத்து தி.மு.கவை வீட்டிற்கு அனுப்பிவிட துடிக்கிறார்கள்... கடுப்பாகும் மு.க.ஸ்டாலின்..!
“இந்து மதத்தை வைத்து தி.மு.கவை வீட்டிற்கு அனுப்பிவிட வேண்டும் என நினைக்கும் சிலரின் திட்டம் நடக்காது” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
“இந்து மதத்தை வைத்து தி.மு.கவை வீட்டிற்கு அனுப்பிவிட வேண்டும் என நினைக்கும் சிலரின் திட்டம் நடக்காது” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னை, ராயபுரத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், “ஒருகாலத்தில் வைதீக திருமணங்களை நடத்தி வைப்பதற்கு புரோகிதர்களை தேடி அலையும் நிலை இருந்தது. தற்போது நிலைமை தலைகீழாகி சீர்திருத்தத் திருமணங்கள் அதிகளவில் நடக்கின்றன. இப்போதெல்லாம் எங்களைப் போன்ற புரோகிதர்களுக்குதான் தேவை அதிகம் இருக்கிறது.
அருகிலேயே ஆன்மீகவாதிகளை வைத்திருக்கிறோம். ஆன்மிகவாதிகள் என்னோடு இருப்பது எனக்கும் பெருமைதான். இந்து மதத்தை வைத்து சிலர் அரசியல் செய்து வருகின்றனர். அதை வைத்து தி.மு.கவை வீட்டிற்கு அனுப்பிவிட வேண்டும் என எண்ணுகிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. ஊடகங்கள் உண்மைச் செய்தியை மறைக்கின்றனர். ஊடகங்களைச் சொல்லிக் குற்றமில்லை. அவர்களை இயக்குகிறவர்கள் தான் எல்லாம். ஆனால், எவ்வளவுதான் மூடி மறைத்தாலும் மக்கள் உண்மையை அறிந்து தி.மு.க பக்கம் நிற்கிறார்கள். யாராவது கேட்டை திறந்து பேட்டி கொடுத்துவிட்டு படப்பிடிப்புக்கு சென்றுவிட்டால் அதை ஊடகங்கள் முக்கிய செய்தியாக ஒளிபரப்புகின்றன.
தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன், தமிழ்நாடு பப்ளிக் கரப்ஷனாக மாறியிருக்கிறது. இந்த முறைகேடுகள் 2016ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகின்றன. டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டுக்குக் காரணம் ஜெயக்குமார் தான். தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். நான் சொல்வது இடைத்தரகர் ஜெயக்குமாரை. சி.பி.சி.ஐ.டி போலிஸார் தேடிவந்த நிலையில் இடைத்தரகர் ஜெயக்குமார் தானாக முன்வந்து சரணடைய காரணம் என்ன? அங்குதான் சூழ்ச்சி இருக்கிறது.
டி.என்.பி.எஸ்.சி முறைகேடு வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு விவகாரத்திற்குப் பொறுப்பேற்று அமைச்சர் ஜெயக்குமார் பதவி விலக வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறோம். அப்போதுதான் சுதந்திரமாக விசாரனை நடக்கும். அடுத்த ஆண்டு தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் தற்போது நடைபெற்று வரும் ஊழல், லஞ்சம், லாவண்யம் அனைத்துக்கும் விசாரணை நடத்தி தண்டனை பெற்றுத் தருவோம்” எனத் தெரிவித்துள்ளார்.