இந்துக்கள் வழிபாடு எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் இந்து சமய அறநிலையத்துறை தலையிடலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

அமைச்சர் சேகர்பாபு திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் 5 கோயில்களுக்கு ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயில், திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோயில், திருத்தணி முருகன் கோயில், திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில் உள்பட 5 இடங்களில் ரோப் கார் வசதி அமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த 5 இடங்களிலும் நேரில் ஆய்வு செய்து, சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து அறிக்கை தருமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதையொட்டிதான் திருச்சி வந்துள்ளேன்.
இத்திட்டம் மறைந்த முதல்வர் மு.கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டது. பின்னர் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்தக் கோயில்களில் விரைவில் ரோப் கார் வசதி அமைக்கும் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை தொடங்கும். வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் நவீன தொழில்நுட்பத்துடன் ரோப் கார் வசதி உள்ளதைப்போல, உலகளவில் இதற்கான வரைபடம், திட்டம் தயாரித்து, ரோப் கார் வசதி செய்து தர முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
இந்துக்கள் வழிபாடு எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் இந்து சமய அறநிலையத்துறை தலையிடலாம். சட்டம் 1956, உட்பிரிவு 1-ன் படி எங்கெல்லாம் கோயில் உள்ளதோ அங்கெல்லாம் அறநிலையத்துறை தலையிடலாம்" என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred