உயரப் பறக்கும் பெட்ரோல், டீசல் விலை.. வரி விதிப்புக்கு ஓர் எல்லை வேண்டாமா.? டாராக கிழிக்கும் ப.சிதம்பரம்.!
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அரசின் தவறான வரிக்கொள்கையே காரணம் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தாறுமாறாக உயர்ந்து வருகிறது. நாடு முழுவதும் பெட்ரோல் விலை 100 ரூபாயை எப்போதோ தாண்டிவிட்டது. இதேபோல் டீசல் விலையும் முதன் முறையாக 100 ரூபாயைக் கடந்திருக்கிறது. இதனால், இரு சக்கர வாகன ஓட்டிகள் முதல் கனரக வாகன ஓட்டிகள் வரை கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் ஒலித்து வருகிறது.
இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசின் தவறான வரிக்கொள்கையே காரணம் என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் ப.சிதம்பரம் பேசுகையில், “ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் ரூ.100-ஐ தாண்டி விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. தற்போதைய சூழலில் நடுத்தர மக்கள்கூட செலவு செய்ய முடியாது. 1 பேரல் கச்சா எண்ணெயின் விலை 145 டாலாராக கூட இருந்திருக்கிறது. ஆனால், தற்போதைய விலை உயர்வுக்கு அரசின் தவறான வரிக்கொள்கையே காரணம்.
வரி விதிப்பு என்பது எப்போதுமே ஓர் எல்லைக்குள் இருக்க வேண்டும். ஒரே பொருளின் மீது 33 சதவீத அளவுக்கு வரியை விதிப்பது என்பது தவறானது. கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் உலக வர்த்தகம் முடங்கிக் கிடக்கிறது. மக்களின் கடன் சுமையும் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு தனிமனிதனின் சேமிப்பும் குறைந்துவிட்டது. இதெல்லாம் நாட்டுக்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை மணி” என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.