high court condemns who filed petition about jayalalitha death

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து உத்தரவிட கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, மூன்றை மாத சிகிச்சைக்குப் பிறகு டிசம்பர் 5-ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக பல்வேறு தரப்பில் சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.

ஜெயலலிதாவின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் அவர் இறந்தது வரை, விசாரணை ஆணையம் விசாரணை நடத்திவருகிறது.

இதற்கிடையே, ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால், அதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக புகார் அளித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை ஆணையத்தை நாடாமல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக ஏன் அபராதம் விதிக்ககூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான எதுவாக இருந்தாலும் விசாரணை ஆணையத்தை நாடுமாறு உத்தரவிட்டனர்.