புதிய பதவி பெற்ற பெண் எம்எல்ஏ பேனர் கிழிப்பு - கொந்தளிக்கும் டிடிவி ஆதரவாளர்கள்...
டிடிவி.தினகரன் ஆதரவு பெண் எம்எல்ஏவின் பேனர் கிழிக்ப்பட்டதால், அவரது ஆதரவாளர்கள் கொந்தளித்துள்ளனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுகவில் 3வது அணியாக டிடிவி.தினகரன் செயல்பட்டு வருகிறார். தினகரன் சார்பில் கடந்த விரம் 60 பேருக்கு கட்சியுல் புதிய பதவி வழங்கப்பட்டது. அதற்கான பட்டியலை டிடிவி.தினகரன் வெளியிட்டார்.
இதில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.வடிவேல், எம்ஜிஆர் மன்ற பொருளாளராகவும், பாலசுப்பிரமணி எம்எல்ஏ ஜெயலலிதா பேரவை இணை செயலாளராகவும், ஜெயந்தி பத்மநாபன் எம்எல்ஏ மகளிரணி இணை செயலாளராகவும் நியமிக்கப்பட்டனர்.
ஜெயந்தி பத்மநாபன் எம்எல்ஏவுக்கு மகளிர் அணி இணை செயலாளராக புதிய பதவி வழங்கியதற்கு வாழ்த்து தெரிவித்து குடியாத்தம் நகராட்சி அலுவலகம் எதிரே வாழ்த்து பேனர் வைக்கப்பட்டது.
பேனரில் சசிகலா, டிடிவி.தினகரன் மற்றும் எம்எல்ஏ ஜெயந்தி பத்மநாபன் ஆகியோரின் படம் இருந்தது. கடந்த சனிக்கிழமை இரவு நள்ளிரவில் மர்மநபர்கள் சிலர், பேனர் மீது கல்வீசி தாக்கியதில், அதில் இருந்த சசிகலா படம் கிழிந்தது.
இதுகுறித்து எம்எல்ஏ ஆதரவாளர்கள் குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்தனர். பின்னர், கல்வீசி தாக்கியதால் சேதமடைந்த பேனரையும் சீரமைத்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் மீண்டும் அதே பேனரை பிளேடால் சரமாரியாக வெட்டி கிழித்துள்ளனர்.
இன்று காலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள், பேனர் மீண்டும் கிழிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
குடியாத்தம் பகுதியில் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரி ஆதரவாளர்கள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் ஜெயந்தி பத்மநாபன் எம்எல்ஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் எம்எல்ஏ தரப்பினர் மற்றும் டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள் பேனர் கூட வைக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் குடியாத்தத்தில் அதிமுகவினரியே பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.