இன்றும் நாளையும் தமிழகம் மற்றும் புதுவையில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும், இரு தினங்களுக்கு பின்னர் தமிழகத்தில் மழையின் தாக்கம் குறையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இன்றும் நாளையும் தமிழகம் மற்றும் புதுவையில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும், இரு தினங்களுக்கு பின்னர் தமிழகத்தில் மழையின் தாக்கம் குறையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மூன்று முறை சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக இருப்பதாக வந்துள்ள தகவல் சென்னை மக்களை பீதி அடைய வைத்துள்ளது. எப்போதுதான் இந்த மழை ஓயும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில் வானிலை ஆய்வு மையம் இத்தகவல் தெரிவித்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடற் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தீவிரம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மூன்று முறை சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், பெரும்பாலான இடங்களில் மழை நீர் முழுவதுமாக தேங்கி உள்ளது. குறிப்பாக சென்னை தியாகராய நகர், கோடம்பாக்கம், கேகே நகர் பகுதியை பொறுத்தவரையில் நான்கு நாட்களாகவே தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீண்டும் ஒரு கன மழை பெய்தால் எப்படி தாக்குபிடிப்பது என்று அச்சம் சென்னை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

குறிப்பாக தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த கவலைக்கு ஆளாகியுள்ளனர். காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானாலே சென்னை மக்கள் மத்தியில் பதற்றமும் பீதியும் அதிகரித்துவிடுகிறது. எனவே வரும் நாட்களில் மழைப்பொழிவு எப்படி இருக்கும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் எதிர்பார்க்கலாம் என்றும், அதன் பின்னர் சென்னைக்கு மழை வாய்ப்பு குறைந்துவிடும் என்றும், இனி தென் மாவட்டங்களில் தான் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த தகவல் சென்னைவாசிகள் மத்தியில் ஆறுதல் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் இரண்டு நாட்களுக்கு பிறகு தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மழை அளவு குறையக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆந்திர கடலோரப் பகுதிகள் தியானம் மற்றும் ராயலசீமா பகுதிகளில் கேரளா மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

நாளை தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இது உருவாகிய 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரக் கூடும் என்பதால் அந்தமான் கடலோர பகுதிகளில் நாளை முதல் அதிக அளவு மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய இந்தியப் பகுதிகளில் நாளை இரவு ஒரு புதிய பனிப்புயல் அதாவது மேற்கத்திய தொந்தரவு (Western disturbance winter Storm)உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு குஜராத் மாநிலம் மகாராஷ்டிரா மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு மேற்கு மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.