அடுத்த 3 நாட்களுக்கு அடித்து ஊற்றபோகும் மழை.. தயார் நிலையில் கடலோர காவல் படை.. அவசர உதவி எண் இதோ.
அடுத்த 3 நாட்களுக்கு மழை நீட்டிக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், 100 பயிற்சி பெற்ற காவல்துறையினர் மற்றும் பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் மற்றும் மீனவர்கள் இந்த குழுவில் பங்கேற்கு மீட்புப் பணிகளை மேற்கொள்வார்கள் எனவும் தெரிவித்தார்.
மீட்புப் பணிகளை மேற்கொள்ள மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாகவும், பொதுமக்கள் 1093 என்ற அவசர எண்ணை தொடர்புகொண்டு உதவியை நாடலாம் எனவும் தமிழக கடலோர பாதுகாப்புக் குழும கூடுதல் டி.ஜி.பி சந்தீப் மிட்டல் தெரிவித்துள்ளார். அவசர காலங்களின்போது கடலோரப் பகுதியில் வாழும் மக்கள் பலர் கடந்த காலங்களில் நீரில் மூழ்கி பலியான சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. அதேபோல சுற்றுலாத் தனமான கடற்கரைக்கு வரும் பொதுமக்களும் கடலில் மூழ்கி பலியான சம்பவங்களும் நிகழ்ந்து வந்தன. இதைத் தடுக்கும் வகையில் தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் பல்வகை குழு அடங்கிய மூழ்குதல் தடுப்புப் பிரிவு கடந்த மாதம் துவங்கப்பட்டது.
இந்தப் பிரிவில் கடலோரப் பாதுகாப்புக் குழும வீரர்கள், காவல்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர், நீச்சல் வீரர்கள் மற்றும் மீனவர்கள் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு உரிய பாதுகாப்பு உயிர்காக்கும் உபகரணங்கள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது. கடலோர பாதுகாப்புக் குழும கூடுதல் டி.ஜி.பி சந்தீப் மிட்டல் மேற்பார்வையில் இந்த குழுவானது செயல்பட்டு வருகிறது. குறிப்பாக தற்போது பெய்து வரும் தொடர் மழை போன்ற அவசர காலங்களில் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் நீரில் மூழ்க நேர்ந்தால் உடனடியாக செயல்பட்டு எவ்வாறு அவர்களை மீட்பது என்பது குறித்தான பயிற்சிகள் இவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று கடலோர பாதுகாப்புக் குழுமம் சார்பில் பல்வகை குழு அடங்கிய மூழ்குதல் தடுப்புப் பிரிவினரின் ஒத்திகை நிகழ்ச்சி சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் நடைபெற்று வருகிறது.
இந்த ஒத்திகை நிகழ்ச்சியை கடலோர பாதுகாப்புக் குழும கூடுதல் டி.ஜி.பி சந்தீப் மிட்டல் ஆய்வு மேற்கொண்டு அறிவுரைகளை வழங்கினார். பின்னர் பேசிய அவர், அடுத்த 3 நாட்களுக்கு மழை நீட்டிக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், 100 பயிற்சி பெற்ற காவல்துறையினர் மற்றும் பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் மற்றும் மீனவர்கள் இந்த குழுவில் பங்கேற்கு மீட்புப் பணிகளை மேற்கொள்வார்கள் எனவும் தெரிவித்தார். மேலும், கடலோர பாதுகாப்புக் குழுமம் மூலம் உருவக்கப்பட்டுள்ள இந்த குழுவை விரைவில் சென்னை காவல்துறை மற்றும் மாநகராட்சியுடன் இணைந்து ஆலோசனை மேற்கொண்டு தேவைக்கேற்ப பயன்படுத்தவுள்ளதாகவும், பொதுமக்கள் 1093 என்ற அவசர எண்ணுக்கு அழைத்து அவசர காலத்தில் உதவியை நாடலாம் எனவும் அவர் தெரிவித்தார்.