அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக அவர்தான் தேர்வு செய்யப்படுவார்.. ஒரு முடிவில் இருக்கும் பொள்ளாச்சி ஜெயராமன்!
அதிமுக பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்படுவார் என்று முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக ஒற்றைத் தலைமை விவகாரம் பற்றி எரிந்துக்கொண்டிருக்கிறது. அதிமுகவில் ஒறைத் தலைமையாக ஓ. பன்னீர்செல்வம் அல்லது எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரில் யார் உருவெடுப்பர் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிச்சாமியும் ஓ, பன்னீர்செல்வமும் தங்களுடைய ஆதரவாளர்களுடன் தனித் தனியாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இன்னொரு புறம் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் தங்களுடைய ஆதரவை வெளிப்படையாகத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர். மேலும் அதிமுக மூத்த தலைவர்கள் எடப்பாடி பழனிச்சாமியையும் ஓ. பன்னீர்செல்வத்தையும் சந்தித்து தற்போதைய பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வரவும் முயற்சி செய்து வருகிறார்கள்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 23- ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதில் ஒற்றைத் தலைமை குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் முன்னாள் துணை சபாநாயகரான பொள்ளாச்சி ஜெயராமன் தன்னுடைய ஆதரவு யாருக்கு என்பது பற்றி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “அதிமுக பொதுக்குழு ஜூன் 23 அன்று உறுதியாக நடைபெறும். அதேபோல் பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமையும் தேர்வு செய்யப்படுவார். நடைபெற இருக்கும் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார்” என்று பொள்ளாட்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.