அவரு ரோட்டோர அமைச்சர்... அண்ணாமலை யார்..? அதிமுக, பாஜக தலைவர்களைத் தெறிக்கவிட்ட திமுக அமைச்சர்.!
அவர் (ஜெயக்குமார்) ரோட்டோர மந்திரி. ஜெயக்குமார் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை பார்த்து அரசியலுக்கு வந்தவர் என்று தமிழக பால்வளத் துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் அமைச்சர் நாசர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் திமுக ஆட்சி அமைப்பதற்கு முன்பாக ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற திட்டத்தின் மூலம் மனுக்கள் பெறப்பட்டன. ஆவடி சுற்றுவட்டார பகுதியில் பட்டா வேண்டி பலர் அதில் மனு அளித்து இருந்தார்கள். ஆவடி பருத்திப்பட்டு பகுதியில் 200 ஆண்டுகளாகப் பட்டா இல்லாமல் 400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தார்கள். திமுக ஆட்சி அமைந்த பிறகு அவர்களில் 350 பயனாளிகளுக்கு ரூ.318 கோடி மதிப்பிலான நிலங்களுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.” என்று நாசர் தெரிவித்தார்.
அவரிடம் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் அதிமுக பற்றி திரித்து கூறப்பட்டுள்ளதாக மாஜி அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நாசர், “அவர் (ஜெயக்குமார்) ரோட்டோர மந்திரி. ஜெயக்குமார் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை பார்த்து அரசியலுக்கு வந்தவர். அவருக்கு வரலாறும் தெரியாது. கொள்கை கோட்பாடு எதுவும் தெரியாது. அந்த அடிப்படையில் கட்சிக்கும் வரவில்லை. திமுக நீண்ட வரலாறு கொண்டது. திமுகவினர் வாலாறு தெரிந்தவர்கள்.” என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் 3 முதல்வர்கள் உள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலையின் விமர்சனம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நாசர், “அண்ணாமலை யார்? பத்திரிகையாளர்கள் கூறிதான் அவர் யார் என்று தெரிகிறது. அவருக்கு திமுக பற்றியும் அதன் வரலாறு பற்றியும் எதுவும் தெரியாது. அவர்கள் எல்லாம் அப்படிதான் கூறுவார்” என்று நாசர் பதிலளித்தார்.