ஹரி நாடார் என்ன கருவேப்பிலை கொத்தா.? தூக்கி தூர போட.. ராக்கெட் ராஜாவை டரியல் ஆக்கிய காதலி மஞ்சு.
அது அவரின் உழைப்பால் வாங்கப்பட்ட வாக்குகள். தற்போது அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதற்கு அவர் வெளியில் வந்து பதில் கொடுப்பார். வேண்டுமென்றால் வைத்துக்கொள்வதற்கும், இல்லை என்றால் தூக்கி போடுவதற்கும் அவர் ஒன்றும் சாதாரண ஆள் இல்லை. அந்த கட்சிக்காக நாடார் சமுதாயத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்.
பனங்காட்டு படை என்ற கட்சியில் 37 ஆயிரம் வாக்குகளை வாங்கிய ஹரிநாடாரை தேவையில்லை என தூக்கி எறிவதற்கு அவர் ஒன்றும் சாதாரணமான ஆள் இல்லை என அவரின் காதலி மலேசியா மஞ்சு தெரிவித்துள்ளார். தனக்கும் ஹரி நாடாருக்கும் இடையிலான வாழ்க்கையில் ராக்கெட் ராஜா இலவச ஆலோசனை வழங்க தேவையில்லை என்றும் மஞ்சு எச்சரித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் சுயேச்சையாக போட்டியிட்ட வேட்பாளர்களிலேயே அதிக வாக்குகளை பெற்றவர் ஹரி நாடார். வட்டிக்கு பணம் கொடுப்பது, தொழில் தொடங்க பணம் கேட்டு வருபவர்களுக்கு உடமைகளை எழுதி வாங்கிக்கொண்டு பணம் கொடுப்பது என பைனான்சியராக வலம் வந்தவர் ஹரி நாடார். நடமாடும் நகைக்கடையாக வலம் வந்த அவர், எப்போதும் 12 கிலோ எடை கொண்ட நகைகளை அணிந்திருப்பார் இதுதான் அவரின் அடையாளம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பிடிபட்ட அவர், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால் சோதிக்கப்பட்டார். பின்னர் அவர் அணிந்துள்ள நகை மீது அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டவே, நகைகளுக்கான பில் கேட்கப்பட்டது. உரிய ஆவணங்களை காண்பித்த பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். அது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
அதன்பிறகு பனங்காட்டு படை என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்து, அதில் முக்கிய பொறுப்பிலும் அவர் இருந்து வந்தார். இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு 37 ஆயிரத்து 727 வாக்குகள் பெற்றார். அதன்மூலம் திமுக வேட்பாளர் ஆலடி அருணாவின் வெற்றி வாய்ப்பு பறிக்கப்பட்டது. அதன் பிறகு தன்னை பெரிய அரசியல் செல்வாக்குள்ள தலைவராக கருதிக் கொண்ட ஹரி நாடார் பல அரசியல் கட்சித் தலைவர்களையும் சகட்டுமேனிக்கு விமர்சிக்க தொடங்கினார். அடிக்கடி யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்து பல மூத்த தலைவர்களையும் அனாயசமாக விமர்சிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார்.
அந்த வகையில் சீமானை தாக்கிப் பேசிய நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் தலையிட்டு விஜயலட்சுமியை எச்சரித்து பேசினார். அதற்கு ஆவர் மீது கொலை மிரட்டல் புகார் கொடுத்தார் விஜயலட்சுமி. அடுத்தடுத்து பல சர்ச்சைகளில் சிக்கிய அவர் பெங்களூருவை சேர்ந்த இருவரிடம் வட்டிக்கு பணம் வாங்கி தருவதாக கூறி 16 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கர்நாடக மாநில போலீசார் கோவளத்தில் வைத்து அவரை கைது செய்தனர். அதைத் தொடர்ந்து விஜயலட்சுமிக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில் பனங்காட்டுப்படை கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஹரி நாடாரை அக்கட்சியில் இருந்து அக்கட்சித் தலைவர் ராக்கெட் ராஜா நீக்கியுள்ளார். இது ஒரு புறம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் ஹரி நாடாரை சிறையில் இருந்து மலேசியாவைச் சேர்ந்த மஞ்சு என்ற பெண் தமிழகம் வந்துள்ளார். தன்னை ஹரி நாடாரின் மனைவி என கூறிக்கொள்ளும் அவர், தனக்கும் ஹரி நாடாருக்கும் குழந்தை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் ஹரிநாடாரின் முதல் மனைவி ஷாலினிக்கும் மஞ்சுவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இருவரும் தொலைபேசியில் ஒருவரை மாற்றி ஒருவர் மிக மோசமாக பேசிக்கொள்ளும் ஆடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ள மஞ்சு, தனது கணவர் ஹரி நாடார் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கு ஷாலினி தான் காரணம், என்றும் தனது கணவரை கட்சியில் இருந்து தூக்கிஎறிய அவர் கருவேப்பிலை கொத்து இல்லை என மஞ்சு தெரிவித்துள்ளார் மேலும் அவர் கூறியிருப்பதாவது:-
இந்த கட்சி முழுக்க முழுக்க நாடார்களுக்கானது, இந்த கட்சிக்காக எனது கணவர் ஹரிநாடார் மிக கடுமையாக உழைத்துள்ளார். தேர்தலில் நின்ற 37 ஆயிரம் ஓட்டுகளை வாங்கியிருக்கிறார். அது அவரின் உழைப்பால் வாங்கப்பட்ட வாக்குகள். தற்போது அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதற்கு அவர் வெளியில் வந்து பதில் கொடுப்பார். வேண்டுமென்றால் வைத்துக்கொள்வதற்கும், இல்லை என்றால் தூக்கி போடுவதற்கும் அவர் ஒன்றும் சாதாரண ஆள் இல்லை. அந்த கட்சிக்காக நாடார் சமுதாயத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார். தற்போது அவர் சந்தித்துவரும் இந்த வழக்குகூட நாடார்களுக்காகத்தான். ஆனால் இதுவரை அவருக்கு எந்த நாடாரும் குரல் கொடுக்கவில்லை. ஒரு கட்சி நன்றாக இருக்க வேண்டுமென்றால் அக்கட்சியின் தலைவர் நன்றாக இருக்க வேண்டும். ஆனால் அந்த தலைவர் எனக்கு உதவி செய்ய மறுக்கிறார். அவர் எனக்கு எதிராக செயல்படுகிறார், ஹரி நாடாருக்கும் எனக்கும் இடையே உள்ள விவகாரம் தொடர்பாக ராக்கெட்ராஜா எனக்கு இலவச ஆலோசனை வழங்க தேவையில்லை.
எனக்கும் அவருக்கும் இடையில் ராக்கெட்ராஜா வரத் தேவையில்லை, அவர் பனங்காட்டு படை கட்சியின் தலைவர் போல பேசவில்லை, எனக்கு எதிரியை போல பேசுகிறார். ஒரு பெண்ணுக்கு உதவி செய்ய முயற்சிக்கிறாரா? அல்லது பிரச்சனையை அதிகமாக்கி அதில் குளிர்காய நினைக்கிறாரா என்று தெரியவில்லை. மொத்தத்தில் ராக்கெட் ராஜா குறித்து நான் பேச விரும்பவில்லை. யாருடன் வாழ வேண்டும் என்பதை ஹரி நாடார் தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் அதை ராக்கெட் ராஜா தீர்மானிக்க கூடாது. தனது வாழ்க்கை குறித்து முடிவெடுக்க ஹரி நாடாருக்கு தெரியும். ராக்கெட் ராஜா அவருக்கு ஆலோசனை வழங்க தேவையில்லை. இவ்வாறு மஞ்சு சரமாரியாக ராக்கெட் ராஜாவை விமர்சித்துள்ளார்.