பஞ்சாப் சார்பில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவைக்கு உறுப்பினர் பதவிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
பஞ்சாப் சார்பில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவைக்கு உறுப்பினர் பதவிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினர்களில் 13 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி காலம் ஏப்ரல் மாதம் முடிவடைய உள்ளது. முக்கிய மாநிலங்களவை உறுப்பினர்களாக முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான கேரள எம்.பி ஏ.கே அந்தோணி, ஹிமாச்சல பிரதேச எம்.பி ஆனந்த் சர்மா, பஞ்சாப் மாநில எம்.பி சிரோமணி அகாலி தள மூத்த தலைவர் நரேஷ் குஜ்ரால் ஆகியோர் பார்க்கப்படுகின்றனர்.

இவர்களின் பதவிகாலம் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைவதை தொடர்ந்து, ஹிமாச்சல பிரதேசம், நாகாலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களில் தலா 1 எம்.பி.யும், அஸ்ஸாமில் 2 எம்.பி.யும், கேரளாவில் 3 எம்.பி.யும், பஞ்சாபில் 5 எம்.பியும் என 13 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளன. எனவே இந்த 13 காலி இடங்களுக்கும் வரும் 31 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதி நாள் என்ற நிலையில், வேட்புமனு பரிசீலனை மார்ச் 24ம் தேதியும், வேட்புமனு திரும்பப் பெறுவதற்குக் கடைசி நாள் மார்ச் 24ம் தேதி எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மார்ச் 31 ஆம் தேதி காலை 9 மணி தொடங்கி மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும் என்றும் அதைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்படும் எனவும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், பஞ்சாப் சார்பில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவைக்கு உறுப்பினர் பதவிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மேலும் ஐ.ஐ.டி பேராசிரியர் சந்தீப் பதக், டெல்லி சட்டப்பேரவை உறுப்பினர் ராகவ் சதா, அசோக் மிடல், தொழிலதிபர் சஞ்சீவ் ஆரோரா ஆகியோரும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
