பொங்கல் தொகுப்பில் 1000 கோடி ஊழல்...? தமிழக அரசை போட்டு தாக்கிய எச்.ராஜா..
தமிழக அரசு பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் 1800 கோடி ரூபாயில் 1000 கோடி ரூபாய் வரை ஊழல் செய்து இருக்கிறது என்று குற்றசாட்டு தெரிவித்துள்ளார் எச்.ராஜா.
கோவை செல்வபுரம் பகுதியில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டார் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா. அப்போது பேசிய அவர், ‘கடந்த ஆட்சியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் 2500 ரொக்க தொகையாக வழங்கியபோது ரூபாய் ஐந்தாயிரம் வழங்க கோரிய தற்போதைய முதல்வர் தற்போது வெறும் பொங்கல் தொகுப்பு வழங்கி ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடித்து இருக்கிறார்கள்.பொங்கல் தொகுப்புடன் வழங்கப்பட்ட மளிகை பொருட்கள் தரமற்றவையாக இருக்கிறது.
கலப்படமாகவும் பொங்கல் தொகுப்பை கொடுத்து இருக்கிறார்கள். தமிழக அரசு பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் 1800 கோடி ரூபாயில் 1000 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்து இருக்கிறது. குடியரசுதின விழாவில் தமிழக சிறப்பு ஊர்திகள் புறக்கணிப்பு குறித்த கேள்விக்கு, தமிழக அரசு இதில் நாடகம் ஆடுகிறார்கள். மக்களுக்கு இதுபற்றி தெரியும்.
கடந்த 2006 மத்தியில் தி.மு.க கூட்டணி அரசு ஆட்சியில் இருந்த போதும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே தமிழக சிறப்பு ஊர்திகளுக்கு அனுமதி கிடைத்தது. மற்ற சில ஆண்டுகளில் ஏன் அனுமதி கிடைக்கவில்லை என்று தமிழக அரசுக்கு தெரியாதா ? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், மத்திய அரசுக்கும் இதற்கும் தொடர்பில்லை என கூறிய அவர் கடந்த சில ஆண்டுகளில் பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் உத்திர பிரதேச அரசின் அலங்கார வாகன ஊர்திக்கு அனுமதி கிடைக்கவில்லை. வரும் உள்ளாட்சி தேர்தலில் பொங்கல் தொகுப்பில் மக்களை ஏமாற்றிய தமிழக அரசிற்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் ‘ என்று கடும் கண்டனத்தை தெரிவித்தார்.