மாஜி ரமணாவை கொக்கி போட்டு தூக்கிய சிபிஐ! சூடுபிடிக்கும் குட்கா விவகாரம்!
குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னை முன்னாள் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் ரமணா உள்பட 40-க்கு மேற்பட்டோர் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னை முன்னாள் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் ரமணா உள்பட 40-க்கு மேற்பட்டோர் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் தடையின்றி விற்பனை நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 8-ம் தேதி வருமானவரித் துறையினர் சென்னை அருகே செங்குன்றத்தில் உள்ள மாதவராவ் உள்ளிட்டோர் பங்கு தாரராக உள்ள குட்கா கிடங்கில் திடீர் சோதனை நடத்தி, குடோனுக்கு சீல் வைத்தனர்.
இந்தச் சோதனையில் குட்கா விற்பனை செய்வதற்கு லஞ்சம் வாங்கிய முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் குறித்த ஆவணங்கள் மற்றும் மாதவராவ் எழுதிய ரகசிய டைரி, சிபிஐ அதிகாரிகளிடம் சிக்கியது. அதில், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை மாநகர முன்னாள் கமிஷனர் ஜார்ஜ், தற்போதைய டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உள்பட ஏராளமானோரின் பெயர்கள் பட்டியலாக இருந்தது தெரிந்தது.
மேலும், காவல்துறையைச் சேர்ந்த 23 அதிகாரிகளின் பெயர்கள், கலால் வரித்துறை அதிகாரிகள், மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோரும் குட்கா விவகாரத்தில் லஞ்சம் பெற்றதாக குறிப்பிடப் பட்டிருந்ததாக கூறப்பட்டது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு சென்றது. கடந்த ஜூன் மாதம் டெல்லி சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். முதல் கட்டமாக சென்னையில் உள்ள உணவு மற்றும் பாதுகாப்பு துறையைச் சேர்ந்த அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இந்த வழக்கின் முக்கிய நபர் மாதவராவிடம் விசாரணை நடத்த, சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். அதன்படி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் மாதவராவ் ஆஜரானார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் துருவி துருவி விசாரித்தனர்.
அதில், குட்கா விற்பனைக்காக வழங்கப்பட்ட லஞ்சம் தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. மேலும், எவ்வளவு காலம் லஞ்சம் கொடுக்கப்பட்டது, எந்த அதிகாரிகள் எவ்வளவு லஞ்சம் வாங்கினார்கள், உடந்தையாக இருந்தது யார்? யார்? என்பதை வீடியோவிலும், எழுத்து மூலமாகவும் பதிவு செய்தனர். விரைவில் அடுத்தக்கட்ட நடவடிக்கையை தொடங்க இருப்பதாக சிபிஐ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதன் அடுத்த கட்டமாக இன்று காலை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை முன்னாள் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் ரமணா, டிஜிபி ராஜேந்திரன் உள்பட பலரது வீடுகளில் அதிரடி சோதனை தொடங்கியுள்ளனர். சென்னை முகப்பேரில் உள்ள டிஜிபி ராஜேந்திரன் வீடு, விழுப்புரத்தில் பல்பொருள் அங்காடி உரிமையாளர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா வீடு ஆகிய இடங்களில் பரபரப்பு நிலவுவதால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.