இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, சர்வதேச நீதிமன்றம் இன்று  தீர்ப்பு வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. 

இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றியவர் குல்பூஷண் ஜாதவ். இவர், கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 3-ந் தேதி பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கைது செய்யப்பட்டார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்தியாவின் ‘ரா’ அமைப்பிற்கு உளவு பார்ப்பதற்காக ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியதாகவும், பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதாகவும் பாகிஸ்தான் அரசாங்கம் அவர் மீது குற்றம் சாட்டியது.

இது தொடர்பான வழக்கில் குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு மரண தண்டனை விதித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இந்திய அரசு நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் ஐ.நா. அமைப்பின்கீழ் செயல்பட்டு வரும் சர்வதேச கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனையை பாகிஸ்தான் நிறைவேற்றி விட்டதோ என்ற சந்தேகமும் எழுகிறது என்று இந்தியா கவலையும் தெரிவித்தது.

இதனால், மரண தண்டனையை நிறுத்தி வைக்கும்படி சர்வதேச கோர்ட்டு பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டது. இந்தியா தரப்பில் “வியன்னா பிரகடனத்தை பாகிஸ்தான் மீறி இருக்கிறது. இதுபற்றி இந்திய தூதரகத்துக்கு தெரிவிக்கப்படவில்லை. எவ்வித ஆதாரமும் இன்றி குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு மரண தண்டனை விதித்து உள்ளது. 

அவரை உடனே விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டது. பாகிஸ்தான் தரப்போ, “வியன்னா பிரகடனத்தில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிடுவதற்காக உளவு பார்ப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட நாட்டின் தூதரகத்தை அணுகுவது குறித்து எதுவும் கூறப்படவில்லை. இந்த விவகாரத்தை பொறுத்தவரை சர்வதேச கோர்ட்டை இந்தியா அரசியல் மேடையாக்கிவிட்டது” என்று வாதிட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சர்வதேச நீதிமன்றம் குல்பூஷண் ஜாதவிற்கு பாகிஸ்தான் விதித்த மரண தண்டனையை தடை செய்து உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கின் விசாரணை முடிந்து, தீர்ப்பை சென்ற பிப்ரவரி மாதம் 22-ந்தேதி நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், இரு தரப்பு வாதங்களை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று வெளியிடும் என்று தகல்கள் கூறுகின்றன. தீர்ப்புக்கு கட்டுப்படுவதாக பாகிஸ்தான் ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.