ஒரு வழியாக... மோடி முதல் முதலில் வென்ற தொகுதியில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி வெற்றி!
குஜராத் சட்ட சபைத் தேர்தலில் போட்டியிட்ட அம்மாநிலத்தின் முதல்வர் விஜய் ரூபானி, ஒரு வழியாக ராஜ்கோட் மேற்கு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை துவங்கியது. இதில், கருத்துக் கணிப்புகள் கூறியபடி அதிகப் பெரும்பான்மை இல்லை என்றாலும், பாஜக., பெரும்பான்மை பெற்று வந்தது. ஆனால், துவக்கத்தில் அம்மாநில முதல்வர் விஜய் ருபானி பின்னடைவைச் சந்தித்தார். ஆனால், துணை முதல்வர் நிதின் பட்டேல் முன்னிலை பெற்றிருந்தார்.
இந்நிலையில், வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், ராஜ்கோட் மேற்கு தொகுதியில் இருந்து விஜய் ரூபானி வெற்றி பெற்றுள்ளார். குஜராத்தில் அசைக்க முடியாத நாயகராக நரேந்திர மோடி திகழ்ந்து வந்த நிலையில், அவர் பிரதமராகப் பொறுப்பேற்ற பின் நடக்கும் முதல் தேர்தல் என்பதால், இது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தேர்தலாக இருந்தது.
மோடிக்குப் பின்னர், முதல்வர் வேட்பாளராக விஜய் ரூபானி வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது. ராஜ்கோட் மேற்கு தொகுதி பாஜக, வின் கௌரவத்தைக் காட்டும் தொகுதி. இங்கேதான் பிரதமர் மோடி தனது வாழ்க்கையில் முதல் முறையாக போட்டியிட்டு இங்கிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். ராஜ்கோட் நகரமும் குஜராத் மாநில பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் நகரம். குறிப்பாக சௌராஷ்டிரா பகுதியில் வளமையைத் தன்னுள்ளே கொண்ட நகரம். வர்த்தகர்கள் மிகுந்த நகரம்.
இங்கேதான் காங்கிரஸ் தற்போது பெரிய அளவில் வெற்றி பெற காய்களை நகர்த்தியது. காரணம் மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி., பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளால் வர்த்தக சமூகம் பாதிக்கப்பட்டிருப்பதாக பிரசாரம் செய்தது. இந்நிலையில் இதே பகுதியில் பாஜக., முதல்வர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.