தாத்தா செண்டிமெண்ட்... தாரை தப்பட்டை முழங்க வண்டியை கிளப்பும் உதயநிதி..!
2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் கை கொடுத்ததாக கட்சி வட்டாரங்கள் நம்புகின்றன.
தாரை தப்பட்டை முழங்க உதயநிதி ஸ்டாலின் நாளை முதல் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்த ஆண்டு மே-ஜூன் மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் எனக்கூறப்படுகிறது. இந்தநிலையில் கொரோனா அச்சுறுத்தல் இருந்தாலும் தமிழகத்தில் சரியான நேரத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா உறுதிபட தெரிவித்தார்.
இதனிடையே தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயராகி வருகின்றன. இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் நாளை முதல் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். சுமார் 100 நாட்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட அவர் திட்டமிட்டு இருக்கிறார்.
மறைந்த முன்னாள் முதல்வரும், அவரது தாத்தாவுமான கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் இருந்து நாளை பிரசாரம் தொடங்க உள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் கை கொடுத்ததாக கட்சி வட்டாரங்கள் நம்புகின்றன. அதே செண்டிமெண்ட் சட்டமன்றத் தேர்தலிலும் கைகொடுக்குமா? எனக் காத்திருக்கிறார்கள் கழக உடன்பிறப்புகள்.