டிஜிபி நியமனம் : முரண்டு பிடிக்கிறார் கவர்னர்.. முடிவெடுத்து விட்டார் எடப்பாடி - முற்றுகிறது மோதல்!!
தமிழக டிஜிபி நியமனத்தில் கவர்னர் சில சந்தேகங்களை கேட்பதால் பிரச்சனை பெரிதாகிறது.இதையடுத்து கவர்னர் அனுமதியில்லாமலே டிஜிபி நியமனத்தை அறிவிக்க முதலமைச்சர் எடப்பாடி முடிவெடுத்து விட்டதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் மத்திய அரசுடன் மோதல் போக்கை எடப்பாடி அரசு துவங்கி விட்டதாக தெரிகிறது.டிஜிபி டி கே ராஜேந்திரனின் பதவி காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.இதையடுத்து புதிய டிஜிபியாக யாரை நியமிப்பது என்பதற்கான கூட்டம் நடைபெற்றது.
இப்போது பொறுப்பு டிஜிபியாக உள்ள ராஜேந்திரன் மீது குட்கா விவகாரத்தில் பணம் வாங்கிய குற்றாச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக ராஜேந்திரன் வருவதற்கான வாய்ப்பு நேரடியாக இல்லை.
ஆனால்முதலமைச்சர் பழனிசாமியின் விருப்பத்திற்கு உகந்த அதிகாரியாக ராஜேந்திரன் இருப்பதால் அவரை எப்படியும் கொண்டு வந்து விட வேண்டும் என்று எடப்பாடி முயற்சி எடுத்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக 3 பேர் பேனல் என்பதை 6 பேர் பேனலாக மாற்றி அதிலிருந்து ராஜேந்திரனை சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கும் முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து கவர்னரின் ஒப்புதல் பெறுவதற்காக கோப்பு கவர்னர் வித்யாசாகர் ராவுக்கு அனுப்பப்பட்டது.
ஆனால் கவர்னர் இந்த விவகாரத்தில் உள்ளப் பிரச்சனைகள் குறித்து பல கேள்விகளை சந்தேகங்களை எழுப்பி வருகிறார்.
அதற்கு அரசு தரப்பில் அளிக்கப்படும் பதில்கள் கவர்னருக்கு திருப்தி அளிக்காததால் மேலும் சில விளக்கங்களை தலைமை செயலரிடம் கவர்னர் கேட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
மேலும் டிஜிபி நியமனத்தில் உரிய விளக்கம் கிடைக்காமல் உத்தரவிட முடியாது என்று கவர்னர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இந்த விவகாரத்தில் தேவைப்பட்டால் மத்திய அரசின் அனுமதி இல்லாமல் மாநில அரசே அறிவிக்கலாம் என்று முதல்வர் பழனிச்சாமி முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அவ்வாறு எடுக்கும் பட்சத்தில் இது மத்திய மாநில அரசுகளிடையே மோதலாக முடிய வாய்ப்புள்ளது. ஆனாலும் இந்த விவகாரத்தை மாநில அரசு மத்திய அரசுடன் மோதல் போக்கை கையாளாமல் முடித்திட முயற்சி எடுத்து வருகிறது.
ஒருவேளை இந்த பிரச்சனை சுமூகமாக முடிவடையும் பட்சத்தில் இன்று மாலை புதிய டிஜிபி பற்றி அறிவிப்பு வெளியாகலாம்.