முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து கேட்டறிவதற்காக, தமிழக (பொறுப்பு) ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மீண்டும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்தார். இரண்டாவது முறையாக அப்போலோ வந்த அவரை, மக்களவை துணை தலைவர் தம்பிதுரை வரவேற்றார்.


உடல்நலக் குறைவு காரணமாக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் 22 ஆம் தேதி முதல் சென்னை, அப்போலோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஜெயலலிதா குறித்து பல்வேறு வதந்திகள் வந்த நிலையில், இந்த மாதம் 1 ஆம் தேதி, தமிழக (பொறுப்பு) ஆளுநர் வித்யாசாகர் ராவ், மருத்துவமனை சென்று முதலமைச்சர் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் குறித்து மருத்துவமனை வட்டாரம் அவ்வப்போது அறிக்கைகள் வெளியிட்ட வருகின்றன. ஜெயலலிதா தற்போது புரண நலமடைந்து விட்டதாகவும் அவர் விரைவில் வீடு திரும்புவார் எனவும் அதிமுக செய்தி தொடர்பாளர்கள் உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ், இன்று மீண்டும் அப்போலே மருத்துவமனைக்கு சென்றார். அவரை மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை வரவேற்றார்.
