”முதலமைச்சரை மாற்ற முடியாது ”- கையை விரித்தாரா ஆளுநர்...?
முதலமைச்சரை மாற்றும் அதிகாரம் தனக்கில்லை எனவும், முதல்வரை மாற்றும் விவகாரம் குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி முடிவெடுக்க வேண்டிய விஷயம் எனவும் டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்களிடம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நீண்ட நாள் பேச்சுவார்த்தைக்கு பிறகு நேற்று அதிமுகவின் ஒபிஎஸ் அணியும் இபிஎஸ் அணியும் ஒன்றாக இணைந்தன.
பேச்சுவார்த்தைக்கு பிறகு தலைமை அலுவலகம் சென்ற ஒபிஎஸ் அங்கு எடப்பாடி பழனிசாமியுடன் கைகோர்த்து ஒன்றாக இணைந்ததாக அறிவித்தார்.
மேலும் அங்கு ஒபிஎஸ்க்கு துணை முதலமைச்சர் பதவியும், கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும் வழங்கப்பட்டது.
பின்னர் பேசிய ஒபிஎஸ்சும், இபிஎஸ்சும் இரட்டை இலையை மீட்டு கட்சியை காப்பாற்றுவோம் என உறுதி மொழி எடுத்தனர்.
மேலும் சசிகலாவை நீக்க விரைவில் பொதுக்குழு கூட்டப்படும் என வைத்தியலிங்கம் எம்.பி தெரிவித்தார்.
இதையடுத்து டிடிவி தினகரனுக்கு தங்கதமிழ்செல்வன், வெற்றிவேல், செந்தில்பாலாஜி உள்ளிட்ட 18 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்து வந்தனர்.
இதைதொடர்ந்து, விளாத்திகுளம் எம்.எல்.ஏ உமா மகேஷ்வரி இன்று தினகரனை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதனால் டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.
இதைதொடர்ந்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆளுநர் வித்யாசாகரை சந்திக்க ராஜ்பவனுக்கு வருகை புரிந்துள்ளனர். மேலும் அவரிடம் கடிதம் ஒன்றை கொடுத்தனர். அதில், ஆதரவு எம்.எல்.ஏக்களின் நம்பிக்கையை முதல்வர் இழந்துவிட்டதாகவும் எனவே முதல்வரை மாற்ற வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், முதலமைச்சரை மாற்றும் அதிகாரம் தனக்கில்லை எனவும், முதல்வரை மாற்றும் விவகாரம் குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி முடிவெடுக்க வேண்டிய விஷயம் எனவும் டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்களிடம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.