கடந்த 5ம் தேதி முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையொட்டி சட்டமன்ற அதிமுக தலைவராக சசிகலாவை முன்மொழிந்தார். மேலும், சசிகலாவை முதலமைச்சராக பதவியேற்க வேண்டும் என அனைத்து எம்எல்ஏக்களும் ஏகமனதோடு தீர்மானம் நிறைவேற்றினர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதை தொடர்ந்து 7ம் தேதி சசிகலா பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டது. பதவியேற்பு விழா, பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தன.

இதற்கிடையில், முதல்வர் ஒ.பி.எஸ். தனது ராஜினாமா கடித்ததை, தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவிடம் ஒப்படைத்தார். ஆனால் கவர்னர், புதிய முதலமைச்சர் பதவியேற்கும் வரை, அவரையே முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும்படி கூறினார்.

பதவியேற்பு விழா கோலாகலமாக நடக்க இருந்த வேளையில், கவர்னர், கோவையில் நடந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வந்தார். ஊட்டியில் உள்ள தமிழகம் இல்லத்தில் குடும்பத்துடன் தங்கினார். அந்த நேரத்தில், அதிமுக பொது செயலாளர் சசிகலா முதலமைச்சராக பொறுப்பேற்பதற்கு அதிமுக தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தமிழகத்தில் நடக்கும் இக்கட்டான சூழ்நிலையை கண்ட கவர்னர், பல்கலைக்கழக விழாவை ரத்து செய்துவிட்டு, உடனடியாக மும்பை புறப்பட்டு சென்றார். இதனால், அவர் பதவியேற்பு விழாவுக்கு வரவில்லை.

இந்நிலையில், நேற்று இரவு முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்றார். அங்கு சுமார் ஒரு மணி நேரம் தியானத்தில் இருந்த அவர், சசிகலா மீது சரமாரியாக புகார் செய்தார். இச்சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது, தமிழகத்தில் நடைபெறும் நிகழ்வுகளை கவர்னர் வித்யாசாகர் மும்பையில் இருந்தபடியே உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கிறார். மேலும், தமிழகத்தில் நடைபெறும் சலசலப்புகள் குறித்து, சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

மேலும், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடமும், கவர்னர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

எனவே, மும்பை ராஜ்பவனில் இருக்கும் கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வர வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசியல் குழப்பத்தை மத்திய அரசும் உன்னிப்பாக கவனித்து வருகிறது