ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரானதல்ல; தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை சீண்டி வம்புக்கிழுக்கிற சேட்டையாகும். 

ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரானதல்ல; தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை சீண்டி வம்புக்கிழுக்கிற சேட்டையாகும் என திருமாவளவன் கூறியுள்ளார். 

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்தார். இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியான செய்திக் குறிப்பில்;- அமைச்சர் செந்தில் பாலாஜி, வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்தது உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழக்குகளில், கடுமையான கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டுள்ளார். அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி, தன் மீதான விசாரணைக்கும் அவர் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறார். அமைச்சரவையில் தொடர்ந்தால் விசாரணை பாதிக்கப்படும் என்றும் காரணம் காட்டி செந்தில் பாலாஜி நீக்கியுள்ளதாக தமிழக ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆளுநர் இந்த நடவடிக்கைக்கு திருமாவளவன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள் மனநலம் சீராக இல்லாத ஒருவரின் செயல்பாடுகளைப் போலவே உள்ளது. அவருக்கு என்ன ஆனது என்கிற பரிதாபம் மேலிடுகிறது.

அவர் தனது அதிகார வரம்புகளை அறியாமல் செயல்படுகிறாரா? அல்லது உள்நோக்கத்துடன் தமிழகத்தில் அரசியல் குழப்பத்தை உருவாக்க நினைக்கிறாரா? அவரது தான்தோன்றித் தனமான போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

Scroll to load tweet…

மற்றொரு பதிவில்;- ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரானதல்ல; தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை சீண்டி வம்புக்கிழுக்கிற சேட்டையாகும். இது நரேந்திர மோடி, அமித் ஷா உள்ளிட்ட சங்பரிவார்களின் செயல்திட்டமாகும். ஆளுங்கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கான வேலைத் திட்டத்தையும் அவர்களே தீர்மானிக்கின்றனர். இதன்மூலம் பாஜக எதிர்ப்பு நிலையிலிருந்து எதிர்க்கட்சிகளைத் திசைதிருப்பும் சதிமுயற்சியே ஆகும் என்று திருமாவளவன் காட்டமாக கூறியுள்ளார்.