அடி தூள்.. 4 மாவட்டங்களில் அரசு போக்குவரத்து சேவை தொடங்கியது.. பயணிகள் உற்சாகம்.
பொதுமக்கள் அரசு விதித்துள்ள வழிகாட்டு முறைகளான கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி பயணிக்கவே கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அரசின் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் அரசு பேருந்து போக்குவரத்து இன்று முதல் இயங்க தொடங்கியுள்ளது. அதேபோல் 50% பயணிகளுடன் மாநகர போக்குவரத்து பேருந்துகளும் இயங்கத் தொடங்கியுள்ளன. இதுகுறித்த மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் முழு விவரம் பின் வருமாறு:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கோவில் 19 நோய்த்தொற்றின் காரணமாக அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை 21-6-2021 முதல் 28-6-2021 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்கள். இந்த உத்தரவில் வகை -3ல் குறிப்பிட்டுள்ளவாறு, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு இடையே பொது பேருந்து போக்குவரத்தில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி குளிர்சாதன வசதி இல்லாமல் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி அளித்துள்ளார்கள்.
அதைத் தொடர்ந்து மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு .ஆர்.எஸ் ராஜகண்ணப்பன் அவர்கள், இயக்கப்படுகின்ற பேருந்துகளை உரிய முறையில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து, அரசு விதித்துள்ள நெறிமுறைகளை பின்பற்றி இயக்குமாறு உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில் மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் 21-6-2021 இன்று காலை 6 மணி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பொதுமக்கள் அரசு விதித்துள்ள வழிகாட்டு முறைகளான கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி பயணிக்கவே கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் பயணிகளின் வருகைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும், மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளதால் மேற்கண்ட நான்கு மாவட்டங்களில் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.