மதுரையில் 3ல் ஒரு பங்கு கொரோனா மரணத்தை மறைக்கும் அரசு? புள்ளி விவரத்துடன் புட்டு புட்டு வைக்கும் எம்.பி..!
மதுரையில் கொரோனா தொற்று காரணமாக இறந்தவர்களில் மூன்றில் ஒரு பங்கு மரணத்தை அரசு மறைக்கிறது என எம்.பி வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரையில் கொரோனா தொற்று காரணமாக இறந்தவர்களில் மூன்றில் ஒரு பங்கு மரணத்தை அரசு மறைக்கிறது என எம்.பி வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்;- மதுரை மாவட்டத்தில் ஜூலை 15ம் தேதி வரை நிகழ்ந்துள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 129 என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், மதுரை தத்தனேரி மயானத்தில் ஜூலை 15ம் தேதிவரை கொரோனா நோயால் இறந்தவர்கள் 167 பேர் தகனம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இறந்தவர்களில் பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 46 பேர்.
மதுரை கீரைத்துறை அஞ்சலி மின்மயானத்தில் ஜூலை15ம் தேதி வரை கொரோனா நோயால் இறந்தவர்கள் 57 பேர் தகனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 13 பேர் பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மதுரை மாவட்டத்தில் இஸ்லாமியர்களின் அடக்கஸ்தலமான மையவாடியில் கொரோனா நோயால் இறந்தவர்கள் 39 பேர் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் பிற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 8 பேர். இஸ்லாமிய அமைப்புகளால் பிற இடங்களில் நல்லடக்கம் செய்யப்பட்ட இஸ்லாமியரல்லாதவர்களின் எண்ணிக்கை 2.
கிருஷ்துவ கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ( முழு விபரமும் கிடைத்தால் இன்னும் அதிகரிக்கும் ) மொத்தத்தில் பிற மாவட்டங்களைச் சேர்ந்த 67 பேர் நீங்கலாக, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 205 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்ததாக மயானம், அடக்கஸ்தலம், கல்லறைத் தோட்டம் ஆகியவற்றின் விபரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், தமிழக அரசோ 129 பேர் தான் மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இறந்ததாக அறிவித்துள்ளது. மூன்றில் ஒரு பங்கு மரணத்தை (76 பேர்) மறைக்கிறதா தமிழக அரசு? உண்மை நிலையென்ன என்பதை உடனடியாக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் என சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.