மணல் குவாரிகளைத் திறக்க அரசு மேல்முறையீடு செய்ய வேண்டுமாம்... லாரி உரிமையாளர் சங்கம் குரல் கொடுக்கிறது!
மணல் குவாரிகளை மூடச் சொல்லி உயர் நீதிமன்ற மதுரை கிலை கொடுத்த உத்தரவை எதிர்த்து அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல ராசாமணி கோரிக்கை விடுத்திருக்கிறார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் அடுத்து வரும் ஆறு மாதங்களுக்குள் மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது.
தூத்துக்குடி துறைமுகத்தில், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை அப்படி வைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த மணலை அங்கிருந்து வெளியில் கொண்டு செல்ல உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரி புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமையா என்பவர் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அந்த வழக்கில்தான் இந்தப் பரபரப்பு உத்தரவை நீதிபதி மகாதேவன் பிறப்பித்தார். மேலும் அவர், தமிழகத்தின் நலன் கருதி இந்த உத்தரவைப் பிறப்பிப்பதாகவும், ஆறுகளைக் காப்பதற்கு வேறு வழியில்லை என்றும் கூறினார். இதனால், இறக்குமதி மணலைக் கொண்டு செல்வதற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்ய அரசுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு குறித்து நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல ராசாமணி, மணல் குவாரிகளை மூட வேண்டும் என்று கூறப்பட்டுள்ள நீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. இதனை எதிர்த்து அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும். வெளிநாடுகளில் இருந்து மணலை இறக்குமதி செய்தால் அதிக விலை கொடுத்து மணலை வாங்க வேண்டி வரும் என்று கூறினார்.