government seeks temporary drivers and conductors

போக்குவரத்து ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் 19,500 வழங்க வேண்டும், ஓய்வூதியம், பணிக்கொடை உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும், வருங்கால வைப்புத்தொகையை உரிய கணக்கில் சேர்க்க வேண்டும், தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த 7000 கோடி நிதியை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் வெறும் 20% பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகளும் பொதுமக்களும் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில், இதை வாய்ப்பாகப் பயன்படுத்தி தனியார் பேருந்துகள் இருமடங்கு கட்டணம் வசூலிக்கின்றனர்.

இந்த நெருக்கடியை சமாளிக்க, தற்காலிக ஊழியர்களை நியமித்து பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பணிமனைகளில் இருக்கும் பேருந்துகளை இயக்க தற்காலிக ஊழியர்கள் தேவை என போர்டு வைத்துள்ளனர். தொடர்புகொள்வதற்கான மொபைல் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

கனரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் நடத்துநர் உரிமம் வைத்துள்ளவர்களில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். ஆனால், தற்காலிக ஓட்டுநர்களை நியமித்து பேருந்துகளை இயக்குவது, அபாயகரமானது என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.