அரசு அலுவலர்கள், தனியார் மருத்துவமனைகள் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்.. தலைமை செயலர் கடும் எச்சரிக்கை.
கொரோனா சிகிச்சை மற்றும் நிவாரணப் பணி அலுவலர்கள் மற்றும் நிறுவனங்கள் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் என தலைமைச் செயலாளர் அறிவுறுத்தி உள்ளார்.
கொரோனா சிகிச்சை மற்றும் நிவாரணப் பணி அலுவலர்கள் மற்றும் நிறுவனங்கள் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் என தலைமைச் செயலாளர் அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பின் விவரம்: நாட்டின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக கொரோனா தொற்று இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த நம் மாநிலத்தில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவாமல் தடுத்தல், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை காத்தல் ஆகிய இரண்டு முக்கிய இலக்குடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
மருத்துவ நெருக்கடி மனநல பாதிப்பு நிதி நெருக்கடி ஆகிய மூன்றும் நாட்டையும் நாட்டு மக்களையும் ஒன்று சேர்த்து தாக்குதல் நடத்தும் இந்த நேரத்தில் ஒரு சில அரசு அலுவலர்கள் தனியார் மருத்துவமனைகள் மற்றும் வணிக நிறுவனங்களை சேர்ந்த சிலர் மேற்கொள்ளும் சட்டத்திற்குப் புறம்பான மனிதாபிமானமற்ற செயல்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு வர பெற்றுள்ளது. அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார். இதனடிப்படையில் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது, மருந்துகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது, அரசின் இலவச சேவைகளுக்கும் பாதிக்கப்பட்டவர்களிடம் கையூட்டு பெறுவது போன்ற மனிதநேயமற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது.
தவறு செய்யும் அலுவலர்கள் மீது பணிநீக்கம் உட்பட துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேற்படி செயல்கள் குறித்து உடனடியாக தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அரசுத் துறை செயலர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் காவல்துறையின் லஞ்ச ஒழிப்பு பிரிவு ஆகியோர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. எந்த நிலையில் உள்ள அலுவலராக இருப்பினும், அல்லது எந்த நிறுவனமாக இருந்தாலும், புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு தவறு நடக்கக்கூடிய இடங்களில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த அறிவுரை வழங்கப்படுகிறது. மக்களின் உயிர் காக்கும் பணியில் முழு முனைப்போடு ஈடுபட்டுவரும், அரசுக்கு தவறு செய்யும் ஒரு சிலரால் அவப்பெயர் ஏற்படாமல் கவனமாகவும், கண்ணியமாகவும் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என அதில் கூறப்பட்டுள்ளது.