தினகரன் மீது தேசத்துரோக வழக்கு.. இதுதான் காரணமாம்..! நீதிமன்றத்தில் அரசு விளக்கம்..!
நீட் தேர்வுக்கு எதிராகவும் முதல்வர் பழனிசாமிக்கு எதிராகவும் சேலத்தில் தினகரன் ஆதரவாளர்கள் துண்டு பிரசுரங்கள் விநியோகித்தது தொடர்பாக தினகரன், எம்.எல்.ஏ வெற்றிவேல் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தினகரன், புகழேந்தி உள்ளிட்டோர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி தினகரன் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இதுதொடர்பாக அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் பதிலளிக்கப்பட்டது. அதில், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே தினகரன் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைக்கேட்ட நீதிமன்றம், சேலத்தில் விநியோகிக்கப்பட்ட நீட் தேர்வு தொடர்பான பிரசுரத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கருத்துகள் இல்லை எனக்கூறி, இதுதொடர்பாக அரசு வழக்கறிஞர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.