அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியம்... தமிழக அரசு பிறப்பித்த அதிரடிஆணை...!
அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியத்தை கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கொரோனா பெருந்தோற்றின் 2வது அலையைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் தமிழக அரசுக்கு உதவும் வகையில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தாரளமாக நிதி கொடுக்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து தொழிலதிபர்கள், திரையுலகினர், அரசியல் கட்சி தலைவர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் கோடிகளிலும், லட்சங்களிலும் நிதி வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியத்தை கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், “கொரோனா வைரஸ் நோய்த் தொற்று (கோவிட் 19) பரவலின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவதற்கும், நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண பணிகளை மேற்கொள்வதற்கும், போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது 11.05.2021 நாளிட்ட செய்தி வெளியீட்டில், இந்தப் பேரிடரை எதிர்கொள்வதற்கு அரசு கூடுதலான நிதி ஆதாரங்களைச் செலவிட வேண்டிய தேவை உள்ளது என்றும், அரசின் முனைப்பான முயற்சிகளுக்கு சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தங்களால் இயன்ற வகையில் உதவி செய்ய வேண்டியது அவசியம் எனவும் குறிப்பிட்டு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாரளமாக நன்கொடை வழங்க வேண்டும் என மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
2. அதனைத் தொடர்ந்து, பல்வேறு அரசுப் பணியாளர் சங்கங்கள் அளித்த கடிதங்களில், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து தமிழக மக்களை பாதுகாக்க எடுக்கப்படும் அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியத்தினை தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
3. அரசுப் பணியாளர் சங்கங்களின் மேற்குறிப்பிட்ட விருப்பத்தினை தீவிர பரிசீலனை செய்து, அதனை ஏற்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவல் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்காக, அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியம் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கான ஊதியத்தினை அவர்களது சொந்த விருப்பத்தின் பேரில், பின்வரும் நடைமுறைகளைப் பின்பற்றி, மே அல்லது ஜூன், 2021-ஆம் மாதத்திற்கான ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க அனுமதித்து அரசு ஆணையிடுகிறது