தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் பயணம் இடைவேளைக்காக சாலையோரங்களில் அமைக்கப்பட்டிருக்கும் பயண வழி உணவகங்களில் இறங்கி வருவது வழக்கம். ஆனால், இங்கு உணவுகள் தரமற்ற முறையிலும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தொடர் புகார்கள் எழுந்தது. 

விக்கிரவாண்டி அருகே தரமற்ற உணவு மற்றும் கூடுதல் விலைக்கு விற்ற மேலும் 5 தனியார் உணவகங்களில் அரசு பேருந்துகள் நிற்க போக்குவரத்துதுறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிரடியாக தடை விதித்துள்ளார். 

தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் பயணம் இடைவேளைக்காக சாலையோரங்களில் அமைக்கப்பட்டிருக்கும் பயண வழி உணவகங்களில் இறங்கி வருவது வழக்கம். ஆனால், இங்கு உணவுகள் தரமற்ற முறையிலும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தொடர் புகார்கள் எழுந்தது. இதனையடுத்து, அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை சமர்பித்தனர். இந்நிலையில், விக்கிரவாண்டி அருகே உள்ள அண்ணா, உதயா, வேல்ஸ், ஹில்டா, அரிஸ்டோ ஆகிய 5 உணவகங்களில் அரசுப்பேருந்துகள் நிற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்துதுறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- அரசு போக்குவரத்துக் கழக விரைவு பேருந்துகள் நிற்கும் நெடுஞ்சாலை உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் அண்ணா, உதயா, வேல்ஸ், ஹில்டா, அரிஸ்டோ ஆகிய 5 உணவகங்களில், சுகாதாரமற்ற உணவுப்பொருட்களை அதிக விலைக்கு விற்றது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, அந்த 5 உணவகங்களில் அரசு பேருந்துகளை நிறுத்த தடை விதிக்கப்பட்டத்துடன், அங்கு அரசு பேருந்துகளை நிறுத்துவதற்காக போடப்பட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே மாமண்டூர் அருகே உள்ள உணவகத்தில் பேருந்துகள் நின்று செல்ல தடை விதித்த நிலையில், தற்போது விக்கிரவாண்டி உணவகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.