எடப்பாடி பழனிசாமிக்கு மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிடுவாரா கவர்னர் ? பரபரப்பாக சூழ்நிலையில் தமிழகம்!!!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக டி,டி,வி.தினகரன் ஆதரவாளர்கள் அறிவித்துள்ளதையடுத்து இன்று சென்னை வந்துள்ள ஆளுநர் வித்யாசாகர் ராவ் Floor Test நடத்த உத்தரவிடுவாரா ? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இரண்டாக பிளவுபட்டு நின்ற அ.தி.மு.கபல மோதங்களுக்கும் பிறகு தற்போது மீண்டும் இணைந்துள்ளது. ஓபிஎஸ் துணை முதலமைச்சராக்கப்பட்டார். மேலும் ஓபிஎஸ் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும் நியமக்கப்பட்டார்.
அதே நேரத்தில் அதிமுகவில் இருந்து சசிகலாவையும், டி.டி.வி. தினகரனையும் நீக்க முடிவு செய்யப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கவர்னர் வித்யா சாகர் ராவை கடந்த 22-ந் தேதி நேரில் சந்தித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெறுவதாக கடிதம் கொடுத்தனர்.
இந்த 19 பேர் அல்லாமல் மேலும் 2 எம்எல்ஏக்களும் தினகரனுக்கு ஆதரவு அளித்துள்ளனர். இதையடுத்து இபிஎஸ் அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்டதாகவும், உடனடியாக சட்டசபையை கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்றும் திமுக, காங்கிரஸ் கட்சிகள் கவர்னர் வித்யாசாகர் ராவை கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளன,
இந்த பரபரப்பான சூழ்நிலையில் மும்பை சென்ற ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று சென்னை திரும்பினார்.
இந்நிலையில் திமுக தலைமை நிலையச் செயலாளர் துரை முருகன் தலைமையில் அக்கட்சியின் . எம்.பி. க்களும்., எம்.எல்.ஏ.க்களும் ஆளுநரை நேரில் சந்தித்து Floor Test நடத்த வலியுறுத்த உள்ளனர்.
தற்போதைய நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு 110 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. எனவே, பரபரப்பான இந்த சூழ்நிலையில் கவர்னர் வித்யாசாகர் ராவ், விரைவில் தமிழக சட்டசபையை கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிடுவார் என்று எதிர்பர்க்கப்படுகிறது.