கொரோனா காலத்தில் இந்தியாவுக்கு உதவும் கூகுள்... சுந்தர் பிச்சை சிறப்பான அறிவிப்பு..!
கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசியை உருவாக்க சர்வதேச அறிவியலாளர்கள் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர்.
கொரோனாவால் தத்தளிக்கும் இந்தியாவுக்கு கூகுள் நிறுவனம் சார்பில் ரூ.135 கோடி நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவில் மோசமடைந்து வரும் கோவிட் 19 நெருக்கடி கருத்தில் கொண்டு கூகுள் நிறுவனம் இந்தியாவுக்கு ரூ .135 கோடி நிதியை வழங்குகிறது. மருத்துவ உதவிகளுக்காக கூகுள் நிறுவனம், ஊழியர்கள் இந்தியாவுக்கு 135 கோடி நிதியை அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, கொரோனா காலக்கட்டத்தில், பொது சுகாதார ஊழியர்கள் மற்றும் அறிவியலாளர்கள் ஆகியோரின் பணி அர்ப்பணிப்பை உலகமே பாராட்டும் வகையில் சிறப்பு கூகுள் டூடுல் வெளியிடப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் கொரோனா கோரதாண்டவம் ஆடி வரும் நிலையில் சுகாதார பணியாளர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து மக்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசியை உருவாக்க சர்வதேச அறிவியலாளர்கள் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். அதன்படி, பொது சுகாதார ஊழியர்களுக்கும், அறிவியல் சமூகத்திற்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் கூகுள் இன்று சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டு கவுரவித்துள்ளது.