எம்.எல்.ஏ.களுக்கு 300 தங்க பிஸ்கட், 5 ஆயிரம் வெள்ளித்தட்டு... சட்டசபை வைரவிழாவை முன்னிட்டு ரூ. 30 கோடி வரை செலவுக்கு பட்ஜெட்!
கர்நாடக சட்டசபையான ‘விதான் சவுதா’ வின் வைர விழா(60-ம் ஆண்டு) இந்த ஆண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில், எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் 300 தங்க பிஸ்கெட்களும், ஒரு வௌ்ளித்தட்டும் பரிசாக வழங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ. 30 கோடி வரை நிதி அரசிடம் கோரப்பட்டுள்ளது.
கர்நாடச சட்டசபையான ‘விதான் சவுதா’வின் வைர விழாவை சிறப்பாக கொண்டாட முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.
இந்த விழாவின் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள், மற்றும் தலைமைச் செயலாக அதிகாரிகள் ஆகியோருக்கு மரியாதை செய்யும் விதமாக 300 தங்கக்கட்டிகள், 5 ஆயிரம் வெள்ளித்தட்டுகள் வழங்கப்பட உள்ளன.
இது குறித்து தலைமைச் செயலக அதிகாரி ஒருவர் கூறுகையில், “ விதான் சவுதா வைரவிழாவை சிறப்பாக கொண்டாடும் விதமாக நாங்கள் திட்டமதிப்பு குறித்து நிதி அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம். இதில் விதான் சவுதா உருவம் பொறித்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள தங்கபிஸ்கெட்கள், ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள 5 ஆயிரம் வெள்ளி தட்டுகள் வாங்க திட்டமிட்டுள்ளோம்.
இதற்காக விழா நடத்த ரூ.27 கோடியும், பரிசுகள் வாங்க ரூ.3 கோடியும் நிதி அரசிடம் கோரப்பட்டுள்ளது. ஆனால், இந்த திட்டத்துக்கு இதுவரை நிதித்துறை ஒப்புதல் அளிக்கவில்லை’’ என்றார்.
இதற்கிடையே தலைமைச் செயலகத்தின் இந்த திட்ட அறிக்கை நிராகரிக்கப்படும் என்று சட்ட அமைச்சகம் கூறுகிறது. அந்த அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ கர்நாடக அமைச்சரவையின் ஒப்புதல் பெறாமல், தலைமைச் செயலாளர் திட்ட அறிக்கையை தயாரித்துள்ளார். இந்த திட்டத்துக்கு இன்னும் அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவில்லை என்பதால், நிராகரிக்கப்படும்’’ என்றார்.
இந்த திட்டத்துக்கு அமைச்சரவையில் உள்ள பல அமைச்சர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில்,“ மக்களின் வரிப்பணத்தில் இந்த அளவுக்கு வீணாண செலவு தேவையில்லை’’ என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
மேலும், பா.ஜனதா கட்சி தலைவர் சுரேஷ் குமாரும் இந்த திட்டத்தை கண்டித்துள்ளார்.அவர் கூறுகையில், “ மக்களின் பங்கேற்காத சட்டசபைக் கூட்டத்தில்,எம்.எல்.ஏ.க்களுக்கு ஏன் செலவு செய்ய வேண்டும். தங்க பிஸ்கெட் பரிசு என்பது வரிசெலுத்துபவர்களின் வரிப்பணத்தை வீணாக்குவதாகும்’’ என்றார்.
இம்மாதம் 25-ந்தேதி சிறப்புக் கூட்டத்தொடரை கூட்டி நடத்தப்பட உள்ள இந்த விழாவில் மைசூர்மாநிலம் உருவாகியது, கர்நாடக மாநிலம் ஒருங்கிணைந்தது, கன்னட மொழி, கன்னடர்களின் வரலாறு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
மேலும், முன்னாள் முதல்வர்கள் கே.சி. ரெட்டி, கெங்கால் ஹனுமந்தய்யா, கடிக்கால் மஞ்சப்பா ஆகியோருக்கு மரியாதை செய்யப்படுகிறது. விதான் சவுதாவை 3டி வடிவத்தில் காட்சிப்படுத்த உள்ளது. 360 டிகிரி கோணத்தில் விதான்சவுதாவை காணும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
கிராமி விருது பெற்ற ரிக்கி கெஜ் குழுவினர் இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட உள்ளது. இதற்காகவிதான்சவுதாவை புனரைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மின்விளக்கு அலங்காரத்துக்காக மட்டும் ரூ.3.5 கோடி செலவு செய்யப்பட உள்ளது.