தங்க கவசத்தை பன்னீர்செல்வத்திடம் கொடுக்காதீங்க.. தினகரன் ஆதரவாளர்கள் பிரச்னை செய்வதால் பதற்றம்..!
முத்துராமலிங்க தேவரின் தங்க கவசத்தை பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது. தங்க கவசத்தை பெறுவதற்காக பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் மதுரை அண்ணாநகர் கிளையில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் இருக்கிறார். இந்நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தினகரன் ஆதரவாளர்கள், தங்களையும் உள்ளே அனுமதிக்க வேண்டும் என கோருவதால் பரபரப்பு நிலவுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் ஆண்டுதோறும் அக்டோபர் 30-ம் தேதி முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா நடைபெறும். ஜெயந்தி விழாவின்போது முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அணிவிக்கும் வகையில் அதிமுக சார்பில் 13 கிலோ எடையுடைய தங்க கவசத்தை ஜெயலலிதா வழங்கியிருந்தார்.
அந்த தங்க கவசம் தேவர் ஜெயந்தியின்போது முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அணிவிக்கப்படும். பின்னர் பாதுகாப்பாக மதுரையில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா கிளையில் வைக்கப்படும். ஆண்டுதோறும் அக்டோபர் 25-ம் தேதி தங்க கவசத்தை அதிமுகவின் பொருளாளர் என்ற முறையில் கடந்தாண்டு வரை பன்னீர்செல்வம் தங்க கவசத்தை வங்கியிடமிருந்து பெற்று தேவர் சிலைக்கு அணிவித்து வந்தார். இந்நிலையில் அதிமுக இரு அணிகளாக பிரிந்து பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டார். திண்டுக்கல் சீனிவாசன் நியமனத்தை எதிர்த்தும் அதிமுக வங்கி கணக்கை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்தும் பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தார்.
அதிமுக அணிகள் ஒன்றாக இணைந்தபோதும் வழக்கு நிலுவையில் உள்ளதை காரணம் காட்டி தங்க கவசத்தை ஒப்படைக்க வங்கி நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து முத்துராமலிங்க தேவர் தங்க கவசத்தை பெற அதிமுகவினர் வங்கி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின்போது வங்கி நிர்வாகம், ஆட்சியரின் அனுமதியை கோரியது. மாவட்ட நிர்வாகம், தேவர் உறவினரிடம் ஆட்சேபனையில்லா கடிதம் பெற அறிவுறுத்தியது.
இதையடுத்து தங்க கவசத்தை பெறுவதற்காக மதுரை சென்ற துணை முதல்வர் பன்னீர்செல்வம், தங்க கவசத்தைப் பெறுவதற்காக வங்கிக்குள் இருக்கிறார். தங்க கவசத்தைப் பெறுவதற்காக நடவடிக்கைகள் வங்கிக்குள் நடைபெற்றுவரும் நிலையில், பன்னீர்செல்வத்திடம் தங்க கவசத்தை கொடுக்கக்கூடாது எனவும் தங்களையும் உள்ளே அனுமதிக்க வேண்டும் எனவும் கோரி தினகரன் ஆதரவாளர்கள் வங்கிக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பதற்றமான சூழல் நிலவுகிறது.