பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டதற்காக வெட்கப் படுகிறேன் ! கோவா முன்னேற்றக் கட்சி தலைவர் வேதனை !!
பாஜக-வுடனான கூட்டணியில் இணைந்ததற்கு வருந்துவதாக கோவா முன்னேற்றக் கட்சித் விஜய் சர்தேசாய் கூறியுள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு நடைப்பெற்ற கோவா சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக-வுக்கு எதிராக போட்டியிட்ட கோவா முன்னேற்றக் கட்சி, தேர்தலுக்குப் பின் அதே பாஜக-வுக்கு ஆதரவளித்து, அமைச்சரவையிலும் இடம்பெற்றது.
கோவா முன்னேற்றக் கட்சியின் ஆதரவு இல்லாவிட்டால், ஆட்சியில் தொடர முடியாது என்பதால், அக்கட்சியின் தலைவர் விஜய் சர்தேசாய்க்கு, துணைமுதல்வர் பதவி வழங்கியது பாஜக.
ஆனால், அண்மையில் காங்கிரசை சேர்ந்த 10 எம்எல்ஏ-க்கள் பாஜக-வுக்குத் தாவியதால், கோவா சட்டப்பேரவையில் பாஜக பெரும்பான்மை பெற்றது. கூட்டணிக் கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவு அக்கட்சிக்கு அவசியமில்லாமல் போனது.
இதையடுத்து, கோவா முன்னேற்றக் கட்சிக்கு வழங்கப்பட்டிருந்த துணை முதல்வர் பதவி உட்பட 3 அமைச்சர் பதவிகளையும், சுயேச்சை எம்எல்ஏ ஒருவருக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சர் பதவியையும் பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக அரசு பறித்துக் கொண்டது.
இந்நிலையில்தான், முன்பு பாஜக கூட்டணியில் இணைந்ததற்காக வருத்தப்படுவதாக கோவா முன்னேற்றக் கட்சியின் தலைவர் விஜய் சர்தேசாய் கூறியுள்ளார்.
“மனோகர் பாரிக்கரின் மறைவுக்குப் பிறகும் நாங்கள் பாஜக கூட்டணியில் நீடித்ததற்காக வருந்துகிறோம். அரசியல் மரபை பாஜக கொன்று விட்டது. இனிமேல் நாங்கள் பாஜக-வுடன் இணைந்து இருக்கப் போவதில்லை” என்றும் சர்தேசாய் கொதித்துள்ளார்.