மலேஷியாவிலும் Go Back Modi ….. தமிழர்களைக் கொல்லாதே என முழுக்கமிட்டு கடும் எதிர்ப்பு….
மலேஷியா சென்றிருந்த பிரதமர் மோடிக்கு அந்நாட்டு வாழ் தமிழர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். Go back modi என முழக்கமிட்டும் , தமிழர்களை கொல்லாதே என பதாகைகளை ஏந்தியும் தமிழகர்கள் நடத்திய போராட்டம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக இந்தோனேசியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு சென்றுள்ளார். இந்தோனேசியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி, தனது பயணத்தை முடித்துக் கொண்டு, அங்கிருந்து மலேசியா புறப்பட்டு சென்றார்.
அங்கு பிரதமருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. மலேசியாவில் புதிதாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மஹதீர் முகமதுவை சந்தித்து பேசினார்.
இதனிடையே புட்ராஜ்யா பகுதியில் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழர்களை கொல்லாதே, தமிழ் மண்ணை சிதைக்காதே என பதாகைகளை ஏந்தியபடி ’கோ பேக் மோடி’ என முழக்கமிட்டனர்.
மலேசிய பயணத்தை முடித்துகொண்டு பிரதமர் மோடி அங்கிருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்றுள்ளார். சிங்கப்பூரிலும் தமிழர்கள் மோடிக்கு எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.