திட்டமிட்டபடி போராட்டத்தை நடத்துங்கள்...! தினகரனுக்கு உத்தரவிட்ட சசிகலா!
கணவர் இறப்புக்காக பார்க்க வேண்டாம் என்றும் திட்டமிட்டபடி உண்ணாவிரத போராட்டத்தை நடத்துங்கள் என்று சசிகலா கூறியதாக தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. டிடிவி தினகரன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வரும் 25 ஆம் தேதி தஞ்சையில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில், சசிகலாவின் கணவர் ம.நடராஜன், உடல்நலக்குறைவால் இறந்தார். இதனால், தினகரன்
தனது அனைத்து பயண திட்டங்களையும் ரத்து செய்திருந்தார்.
சிறையில் இருக்கும் சசிகலா, ம.நடராஜனின் இறுதி சடங்குக்காக 15 நாட்கள் பரோலில் வந்துள்ளார். நேற்று நடராஜனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், டிடிவி தினகரன் அறிவித்திருந்த உண்ணாவிரதப் போராட்டம் நடக்குமா? என்ற கேள்வி எழுந்தது. திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என்று தினகரன் நேற்று தெரிவித்தார். பெரிய அளவில் மாநாடுகள் நடத்தப்படும் தஞ்சாவூர் திலகர் திடலில், உடணணாவிரத போராட்டம் நடத்துவதற்கு அனுமதி வாங்கியுள்ளனர். தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
திலகர் திடலில் நடைபெறும் பணிகளை தங்க தமிழ்செல்வன், பழனியப்பன் உள்ளிட்டோர் இன்று பார்வையிட்டனர். இதன் பின்னர், தங்க தமிழ்செல்வன், செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அப்போது பேசிய தங்க தமிழ்செல்வன், உச்சநீதிமன்ற உத்தரவுப்பட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எந்த
நடவடிக்கையும் எடுக்கவில்லை. கர்நாடக மாநிலத்தில் தேர்தல் முடியும் வரை மத்திய அரசு எதையும் செய்ய மாட்டார்கள். மத்திய அரசுக்குப் பயந்து, இங்கு இருக்கிற மைனாரிட்டி அரசு அவர்களுக்குத் துணையாகத்தான் செல்வார்கள். அவர்களுக்கு ஆட்சியை ஓட்டினால் போதும்.
37 எம்.பிக்களும் மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து பாஜக அரசை வீட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். கணவர் இறந்து இருந்தாலும் பரவாயில்லை, காவிரி விஷயம் டெல்டா மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனை. அதில் அவர்களின் ஜீவாதாரம் அடங்கி உள்ளது. அதனால் திட்டமிட்டபடி உண்ணாவிரதப் போரட்டத்தை நடத்துங்கள் என்று சசிகலா கூறியுள்ளார். எனவே, பிரம்மாண்டமாக போராட்டம் நடைபெறும் என்று தங்க தமிழ்செல்வன் கூறினார்.