கொரோனா தடுப்பூசிக்கு உலகளாவிய டெண்டர்..! கேலிக்கூத்தான திமுக அரசின் சிக்சர்..!
கொரோனா தடுப்பூசியை கொள்முதல் செய்ய திமுக அரசு உலகளாவிய டெண்டர் கோரிய நடவடிக்கையை அதிரடி சரவெடி, சிக்சர் என ஊடகங்கள் கூறி வந்த நிலையில் அது கேலிக்கூத்தாக முடிந்துள்ளது.
கொரோனா தடுப்பூசியை கொள்முதல் செய்ய திமுக அரசு உலகளாவிய டெண்டர் கோரிய நடவடிக்கையை அதிரடி சரவெடி, சிக்சர் என ஊடகங்கள் கூறி வந்த நிலையில் அது கேலிக்கூத்தாக முடிந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் துவங்கியது. முதலில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. பிறகு 45 வயதுக்குமேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இந்த நிலையில் மே மாதம் முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இதில் , 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்த மத்திய அரசு மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசியை வழங்கியது. ஆனால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசியை மாநிலங்கள், சுயமாக மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து வாங்கிக் கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியது.
இதன்படி மாநிலங்கள் பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து கோவாக்சின் தடுப்பூசியும் சீரம் நிறுவனத்திடம் இருந்து கோவிஷீல்டு தடுப்பூசியையும் வாங்கி வருகின்றன. தமிழக அரசும் இதே பாணியில் தான் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தி வந்தது. ஆனால் தற்போது நாடடு முழுவதும் கொரோனா தடுப்பூசி குறித்த சாதகமான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலங்கள் கேட்கும் அளவிற்கு சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களால் கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்து கொடுக்க முடியவில்லை. இந்த நிலையில் கடந்த மாதம் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த திமுக அரசு, தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி விநியோகத்திற்கு உலகளாவிய டெண்டர் கோரியது.
இதனை திமுக ஆதரவு ஊடகங்கள் வழக்கம்போல் அதிரடி, சரவெடி என கொண்டாடித் தீர்த்தன. ஆனால் இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்ன என்றால். இந்தியாவில் இதுவரை மூன்றே மூன்று கொரோனா தடுப்பூசிக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகியவை இந்திய தயாரிப்புகள். இவை தவிர ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி கிடைத்துள்ளது. அந்த வகையில் பார்த்தால் இந்த மூன்று தடுப்பூசிகளை மட்டுமே இந்தியாவில் மக்களுக்கு செலுத்த முடியும். எனவே எந்த ஒரு மாநில அரசாக இருந்தாலும் இந்த மூன்று தடுப்பூசிகளை கொள்முதல் செய்தால் மட்டுமே மக்களுக்கு செலுத்த முடியும்.
ஆனால் திமுக அரசு எந்த அடிப்படையில் கொரோனா தடுப்பூசிக்கு உலகளாவிய டெண்டர் கோரியது என்பது இங்கு புரியாத புதில். இல்லை கேலிக்கூத்து என்று கூட கூறலாம். டெண்டர் காலம் முடிவடைந்த நிலையில் ஒரு நிறுவனம் கூட தமிழகத்திற்கு கொரோனா தடுப்பூசி விநியோகிக்க முன்வரவில்லை. ஏனென்றால் உலக அளவில் பிரபலமாக உள்ள ஃபைசர், மாடர்னா போன்ற நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசிக்கு இதுவரை இந்தியாவில் அனுமதி கொடுக்கப்படவில்லை. எனவே அந்த நிறுவனங்களால் நிச்சயம் டெண்டரில் பங்கேற்க முடியாது. அது மட்டும் அல்ல, ஃபைசர், மாடர்னா நிறுவனங்களுக்கு இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிக்க மத்திய அரசு அனுமதி கொடுக்க தயாராக உள்ளது.
ஆனால் பக்கவிளைவுகள் ஏற்பட்டால் இழப்பீடு கேட்க கூடாது என்று நிபந்தனை விதித்து அந்த 2 நிறுவனங்களும் தடுப்பூசியை தர மறுத்து வருகிறது. அதே சமயம் டெல்லி மற்றும் பஞ்சாப் நிறுவனங்கள் நேரடியாக ஃபைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்களை தொடர்பு கொண்டு தடுப்பூசி கொள்முதல் குறித்து பேசியுள்ளன. ஆனால் அந்த இரண்டு நிறுவனங்களும் தாங்கள் நேரடியாக மத்திய அரசுடன் தான் டீலிங் பேசுவோம் என்று கைவிரித்துவிட்டன. நிலைமை இப்படி இருக்க தமிழகத்தில் உலகளாவிய டெண்டரில் எந்த நிறுவனங்களும் பங்கேற்காத சோகம் ஏற்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி உற்பத்தி செய்து கொடுக்கவே போதுமான நிறுவனங்கள் இல்லாத நிலையில் தமிழக அரசு அதாவது திமுக அரசு உலகளாவிய டெண்டர் கோரியது கேலிக்கூத்தா, இல்லை ஏமாற்று வேலையா? மக்களுக்கே வெளிச்சம்.