ஆண்ட கட்சியும் அல்ல, ஆளும் கட்சியும் அல்ல. ஆளப் போகிற கட்சி… அதுதான் தாமக….திருச்சியில் சவால் விட்ட ஜி.கே.வாசன் !!!
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு இனி வரும் காலங்கள் வசந்த காலமே என்றும் தொண்டர்கள் எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் தமாகாவை முதல் நிலை இயக்கமாக மாற்றுவார்கள் என்றும் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் நான்காம் ஆண்டு தொடக்கவிழா, திருச்சியில் நடைபெற்றது. இதிலல் பங்கேற்றுப் பேசிய அக்கட்சியில் தலைவர் ஜி.கே.வாசன்,
கடந்த மூன்றாண்டு காலமாக மத்திய பா.ஜ.க அரசின் பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்ற பிரச்சினைகளால் மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்தார்.
புதிய வேலைவாய்ப்பு, கருப்பு பணம், விவசாய பிரச்சினை, விலைவாசி போன்ற பிரச்சினைகளில் மூன்றரை ஆண்டு கால பா.ஜ.கவின் ஆட்சி மக்களுக்கு எந்தவித பயனையும் தரவில்லை என்று அவர் தெரிவித்தார்.
இங்கு கூடியுள்ள கூட்டம் அகங்காரமற்ற , நேர்மையான, அன்பிற்கும், பாசத்திற்கும் அடிமையான கூட்டம். காமராஜர் ஆட்சியையும், வளமான தமிழகத்தை, வலிமையான தமிழகத்தை அமைக்க கூடிய அடித்தளத்தை உருவாக்குகிற கூட்டம் எனத் தெரிவித்தார்.
த.மா.கா ஆண்ட கட்சியும் அல்ல, ஆளும் கட்சியும் அல்ல. ஆளப் போகிற கட்சி எனவும், தமாகாவைச் சேர்ந்தவர்கள் எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் தமாகாவை முதல் நிலை இயக்கமாக மாற்றுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. வேறு எந்த கட்சிக்கும் சளைத்தவர்கள் அல்ல தமாகாவினர். என்றும் வாசன் தெரிவித்தார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான் இருந்த இடத்திலிருந்தே தமிழகத்திற்கு வேண்டியதை பெற்று தந்தார். மாறாக தற்போது ஆட்சியிலிருப்பவர்கள் டெல்லிக்கு நடையாய் நடந்தும் தமிழகத்திற்கு எதுவும் கிடைப்பதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மதுவில்லா தமிழகம், மணல் கொள்ளை, இலவச கல்வி, தரமான மருத்துவம், சாதி-மத மோதல்கள் இல்லாத தமிழகம் போன்றவற்றை த.மா.கா உருவாக்கும் என்றும் ஜி.கே.வாசன் பேசினார்.