Asianet News TamilAsianet News Tamil

சாதி பார்க்காமல் பழகுறது ராமதாஸ் தான்... ஜாதி சண்டையை மூட்டி விடறது ஸ்டாலின்தான்! ஜீ.கே.மணியின் அடேங்கப்பா விளக்கம்!

ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையை அனுப்புகிறோம்; அதை துரைமுருகன் போன்ற விவரமறிந்தவர்களின் உதவியோடு ஸ்டாலின் படிக்க வேண்டும் திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கைக்கு பாமக தலைவர் ஜீ.கே.மணி காட்டமாக பதில் கூறியிருக்கிறார்.

GK Mani Statements Against MK Stalin
Author
Chennai, First Published Apr 30, 2019, 5:54 PM IST

ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையை அனுப்புகிறோம்; அதை துரைமுருகன் போன்ற விவரமறிந்தவர்களின் உதவியோடு ஸ்டாலின் படிக்க வேண்டும் திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கைக்கு பாமக தலைவர் ஜீ.கே.மணி காட்டமாக பதில் கூறியிருக்கிறார்.

பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் முத்தரசன், போலி மத போதகர் எஸ்ரா சற்குணம் ஆகியோருக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை வெளியிட்டதாகக் கூறி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார். மேலும், தமிழகத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று அய்யாவுக்கு அறிவுரைகளையும் இலவசமாக அவர் வழங்கியிருக்கிறார்.

ஸ்டாலினின் அறிக்கையை படித்து முடித்த பிறகு மனிதர்களை கொன்று உண்ணும் புலி, பசுத்தோலை போர்த்திக் கொண்டு ‘‘புத்தம் சரணம் கச்சாமி... தம்மம் சரணம் கச்சாமி’’ போதித்த உணர்வு தான்   ஏற்பட்டது. பொன்பரப்பி நிகழ்வுகள் குறித்தோ, சமூக நல்லிணக்கம் குறித்தோ பேசுவதற்கு ஸ்டாலினுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. பொன்பரப்பியில் வன்முறையைத் தூண்டியவர்களை போற்றிப் பாதுகாப்பதுடன், வன்னிய மக்களை பழிவாங்க வேண்டும் என்பதற்காக இல்லாத ஆதாரங்களையும், சாட்சிகளையும்  போலியாக உருவாக்கி வருவது திமுக தான். மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இடையே மோதல் தொடர வேண்டும்; அதில் தாங்கள் குளிர் காய வேண்டும் என்பது  தான் ஸ்டாலினின் கொள்கையும், கோட்பாடும் ஆகும். பிள்ளையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டுவதைப் போல, பொன்பரப்பியில் வன்முறையை தூண்டி விட்டவர்களுக்கு ஆதரவாக இருந்து கொண்டு,  அமைதி குறித்து பேசுவதன் மூலம் தாம் ஒரு நல்ல நாடக நடிகர் என்பதை ஸ்டாலின் நிரூபித்துள்ளார். மொத்தத்தில் ஸ்டாலினின் அறிக்கை என்பது சாத்தான் ஓதிய வேதம். அதை மக்கள் நம்பமாட்டார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் கடந்த 27-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கை இணையதளங்களிலும், சமூக ஊடகங்களிலும் இருக்கிறது. தேவைப்பட்டால் அதன் நகலை ஸ்டாலினுக்கு அனுப்பி வைக்கிறேன். அதை துரைமுருகன் போன்ற விவரமறிந்தவர்களின் உதவியுடன்  ஸ்டாலின் படிக்க வேண்டும். அதில் ஏதேனும் ஒரு வார்த்தை வன்முறையைத் தூண்டும் வகையில் இருந்தால் கூட ஸ்டாலின் சொல்லுக்கு  கட்டுப்படுகிறேன். அவ்வாறு இல்லை என்றால் ராமதாஸிடம் அவர்களிடம் ஸ்டாலின் மன்னிப்புக் கேட்பாரா?

அதுமட்டுமின்றி, வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 24-ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் எஸ்ரா சற்குணமும், முத்தரசனும் பேசிய பேச்சுக்களையும் துரைமுருகன் போன்றவர்களின் துணையுடன்  ஸ்டாலின் அவர்கள் கேட்க வேண்டும்.‘‘நீங்களும் தாழ்த்தப்பட்டவர்கள் தான். நீங்கள் ஒன்றும் பிராமணர்கள் அல்ல. நீங்கள் ஒன்றும் உயர்குலத்தைச்  சார்ந்தவர்கள் அல்ல. நீங்கள் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தான். ஆனால், உங்களுக்கு நீங்களே சத்திரியர் என்ற பட்டத்தைப் போட்டுக் கொள்கிறீர்கள். நீங்கள் எந்த விதத்தில் சத்திரியர்களாக முடியும்? வன்னியர்களாகிய நீங்கள் மரம்வெட்டிகளாக இருந்து, மரங்களையெல்லாம் வெட்டித் தள்ளி, பாறாங்கற்களையெல்லாம் உருட்டி வைத்து மக்களுக்கு இடையூறை ஏற்படுத்தினீர்கள்’’ என எஸ்ரா சற்குணம் பேசியுள்ளார். இடஒதுக்கீடு கோரி வன்னிய மக்கள் நடத்திய போராட்டத்தை சிறிய மனிதர் சற்குணம் கொச்சைப்படுத்துவதை  மு.க.ஸ்டாலின் நியாயப்படுத்துகிறாரா? ‘‘நானும் ஒரு விடுதலை சிறுத்தை. இந்தக் கிழட்டு சிறுத்தை சீற ஆரம்பித்தால் நாடு தாங்காது’’ என்று அவர் மிரட்டியது தான் சமூக நல்லிணக்கத்தை போற்றும் செயலா?

GK Mani Statements Against MK Stalin

இந்திய கம்யூனிஸ்ட்  மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசும்  போது வன்னியர்களை மரம்வெட்டிகள் என்று கொச்சைப்படுத்தினார். அது சரியான செயலா? அதுமட்டுமின்றி, ‘‘ நக்சலைட்டுகளை எதற்காக சுட்டுக்கொல்ல வேண்டும் என்று சொல்கிறோம்.... நக்சலைட்டுகளை எதற்காக தடை செய்ய வேண்டும் என்று கூறுகிறோம். அதைப் போலத் தான் இவர்களையும் செய்ய வேண்டும்’’ என்றும் கொக்கரித்தார். இயேசுவின் போதனைகளை பரப்புவதாகக் கூறும் மத போதகரும், பொதுவுடைமை பேச வேண்டிய  இயக்கத்தின் தலைவரும் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக விஷம் கக்குவதும், வன்மம் பாராட்டுவதும் சரியா? அவர்களின் இந்த செயலை ஸ்டாலின் ஆதரிக்கிறாரா, கண்டிக்கிறாரா? நேரடி பதில் தேவை. இதுகுறித்து ஸ்டாலினுடன் நேரடியாக விவாதிக்க தயாராக இருக்கிறேன். என்னுடன் விவாதிக்க ஸ்டாலின் தயாரா? அவர் தயார் என்றால் விவாதத்திற்காக இடத்தையும், நேரத்தையும் அறிவிக்கட்டும்.
 
கூட்டணியில் உள்ளவர்கள் ஒரு தவறு செய்தால் அதை ஆதரிப்பது அல்ல கூட்டணி தர்மம்; தவறுகளை  சுட்டிக்காட்டி திருத்துவது தான் கூட்டணி தர்மம். அதை கூட்டணியின் தலைவரான மு.க.ஸ்டாலின்  உணர வேண்டும். பொன்பரப்பி வன்முறை... பொன்பரப்பி வன்முறை என்று மூச்சுக்கு முந்நூறு முறை கூறும் ஸ்டாலின், பொன்பரப்பியில் ஊனமுற்ற அப்பாவி ஒருவரைத் தாக்கியும், இன்னொருவரை பாட்டிலால் குத்தியும், வன்னிய சமுதாய பெண்களை அருவருக்கத்தக்க வார்த்தைகளால் திட்டியும் கலவரத்தை தூண்டியவர்கள் யார் என்பதை மனசாட்சியைத் தொட்டு சொல்வாரா? திமுக அனைத்து சமுதாய மக்களின் கட்சி என்றால் பாதிக்கப்பட்ட வன்னிய மக்களுக்கு ஆறுதலையும், வன்முறை செய்த விசிக கும்பலுக்கு கண்டனத்தையும் தெரிவித்திருக்க வேண்டும் தானே? அதை ஏன் ஸ்டாலின் இதுவரை செய்ய வில்லை. மாறாக அரியலூர் மாவட்ட திமுக செயலாளரை காவல் நிலையத்துக்கு அனுப்பி, வன்னியர்கள் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தது ஏன்? இதில் இருந்தே வன்னிய மக்களுக்கு மு.க.ஸ்டாலினுக்கு எந்த வகையான உறவு என்பதை அறிந்து கொள்ளலாம்.

GK Mani Statements Against MK Stalin

வாக்கு அரசியலுக்காக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கும்பல் செய்யும் தவறுகளுக்கு எல்லாம் சப்பைக்கட்டு கட்டுவதும், நாகரிகத்தையும், நெறிகளையும் மறந்து கைத்தட்டலைப் பெற வேண்டும் என்பதற்காக  நான்காம் தர பேச்சாளர்களைப் போல வக்கிரத்தையும், வன்மத்தையும் கலந்து பேசுபவர்களை சமூக நல்லிணக்கவாதிகள் என்று வக்காலத்து வாங்குவதும்  திமுகவின் தலைவராகவும்,  திமுக கூட்டணியின் தலைவராகவும் இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு அழகல்ல. 

ஸ்டாலின் அறிக்கை எனக்கு எந்த வகையிலும் அதிர்ச்சியோ, வியப்போ அளிக்கவில்லை. ஏனெனில் இப்போது எஸ்ரா சற்குணமும், முத்தரசனும் பேசிய பேச்சுக்களை  ஒரு காலத்தில் பேசிய கட்சி தான் திமுக. தருமபுரி நிகழ்வுகளின் போது, பிரச்சினைக்கு காரணம் யார்? என்பது பற்றி ஆராயாமல், ஆதிக்க சாதியான வன்னியர்கள் தான் அனைத்துக்கும் காரணம் என்று திமுக அவதூறு பரப்பியதை மறக்க முடியுமா? உண்மை கண்டறியும் குழுவை தருமபுரிக்கு அனுப்பி வன்னியர்களை வன்முறையாளர்களாக சித்தரித்ததை மன்னிக்க முடியுமா? வன்மமும், வன்மமும், வஞ்சகமும், வஞ்சகமும் சேர்ந்து கொண்டு மதச்சார்பற்ற அணி என்ற பெயரில் வன்னியர்களுக்கு எதிரான வன்மக் கூட்டணியாக மாறியிருக்கிறது.
 
தமிழகத்தில் அனைத்து சமூகங்களும் நிம்மதியாகவும் அமைதியாகவும் நட்புறவோடும் வாழ்வதற்கு ஏற்ற சுமூகமான சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார். அதுதான் இன்றைய அவசரத் தேவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால், சமூகங்களிடையே மோதலை மூட்டும்  திமுக அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டால் தான் அது நடக்கும்; விரைவில் இது சாத்தியமாகும்.

சமூக நல்லிணக்கம் தான் மருத்துவர் அய்யாவின் உயிர் மூச்சு ஆகும். அனைத்து சமுதாய மக்களும் முன்னேற வேண்டும் என்பதற்காகத் தான் அவர் போராடி வருகிறார். தந்தை பெரியாருக்கு அடுத்தபடியாக சாதி, மத வேறுபாடு பார்க்காமல் அனைத்து தரப்பினரின் நலனுக்காகவும் போராடும் ஒரே தலைவர் மருத்துவர் அய்யா தான். அவரைப் போன்ற மற்றொரு தலைவரை தமிழகத்தில் பார்க்க முடியாது.

GK Mani Statements Against MK Stalin

தமிழகத்தில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதற்காக  சமய, சமுதாய நல்லிணக்க மாநாடுகளை 14 முறை மருத்துவர் அய்யா அவர்கள் நடத்தியிருக்கிறார்.  அவற்றில் 14-ஆவது மாநாட்டை அரியலூரில் கலைஞரை சிறப்பு விருந்தினராக அழைத்து நடத்தினார். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் திரண்ட அந்த மாநாட்டில் அய்யாவின் படம் கூட வைக்கப்படவில்லை. சமூக, சமுதாய நல்லிணக்கத்தை முன்னிறுத்தி தான் அனைத்து நிகழ்வுகளும் நடத்தப்பட்டன. அதற்காக  மருத்துவர் அய்யாவின் சமூக நல்லிணக்கத்தை கலைஞர் புகழ்ந்து பாராட்டினார். இவையெல்லாம் ஸ்டாலினுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது குறித்து அறிந்து கொள்ள வேண்டுமென்றால், இந்த மாநாட்டின் போது உடனிருந்த ஆற்காடு வீராசாமி அவர்களிடம் மு.க.ஸ்டாலினிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

1990-களின் பிற்பகுதியில் தென் மாவட்டங்களில் இரு சமுதாயங்களிடையே மிகப்பெரிய கலவரம்  மூண்ட போது, அங்கு அமைதி, ஒற்றுமை மற்றும் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இரு சமூகத் தலைவர்களையும்  மதுரைக்கு அழைத்துப் பேசியவர் மருத்துவர் அய்யா தான். அந்த நேரத்தில்  தமிழகத்தில் எத்தனையோ கட்சித் தலைவர்கள் இருந்தாலும் இரு சமுதாய மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக போராடியவர் மருத்துவர் அய்யா அவர்கள் தான் என்பது ஸ்டாலினுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இப்போதாவது இந்த வரலாறுகளை மு.க.ஸ்டாலின் அறிந்து கொள்ள வேண்டும். வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று அவதூறுகளை அள்ளித் தெளிக்கக் கூடாது.
 
தேர்தல் தோல்வி பயத்தால் தான் ராமதாஸ் இப்படி பேசுவதாக ஸ்டாலின் கூறுவது கண்டிக்கத்தக்கது. 38 மக்களவைத் தொகுதிகளிலும், 22 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் படுதோல்வி அடையப்போகும் மு.க. ஸ்டாலின், அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்று விட்டதைப் போலவும்,  தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டது போலவும் கனவு கண்டு கொண்டிருக்கிறார். அடுத்த 22 நாட்களில் ஸ்டாலினின் கனவு கலையும்; கூட்டணி நீர்க்குமிழி உடையும். இது உறுதி என இவ்வரி அறிக்கையில் கூறியிருக்கிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios