சொன்ன வார்த்தையை திரும்ப பெறணும், இல்லைன்னா.. கே.எஸ். அழகிரிக்கு வி.பி.துரைசாமி எச்சரிக்கை..!
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பற்றி கே.எஸ்.அழகிரி சொன்ன வார்த்தைகளை திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அக்கட்சியின் துணைத் தலைவர் வி.பி.துரைசாமி எச்சரித்துள்ளார்.
கர்நாடகா வழங்குகிற காவிரி நீரை தமிழகம் வீணடிப்பதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் டெல்லியில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு, கர்நாடகாவுக்கு ஆதரவாக செயல்படுவதா என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்திருந்தார். தமிழகத்திற்கு விரோதமாகச் செயல்படுகிற கர்நாடக அரசுக்கு ஆதரவாக தமிழக பா.ஜ.க. தலைவர் குரல் கொடுப்பது அப்பட்டமான தமிழர் விரோதப் போக்கு என்றும் விமர்சனம் செய்திருந்தார்.
இந்நிலையில் கே.எஸ்.அழகிரியின் விமர்சனம் தொடர்பாக தமிழக பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கர்நாடக அரசுக்கு ஆதரவாக எல்.முருகன் குரல் கொடுத்திருப்பதாக கே.எஸ். அழகிரி சொல்லியிருப்பது கண்டனம் தெரிவிக்கிறேன். எல்.முருகனை பற்றி கே.எஸ் அழகிரி கடுமையான சொற்களை பயன்படுத்தி விமர்சனம் செய்துள்ளார். இதை ஏற்க முடியாது. விவசாயிகள் பற்றிய பேச்சை திரித்து பரப்புகிறார்கள்.
கர்நாடக அரசு காவிரிவின் குறுக்கே அணை கட்டி வரும் விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு தமிழக பாஜக துணை நிற்கும். எல்.முருகன் பற்றி கே.எஸ்.அழகிரி சொன்ன வார்த்தைகளை திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்று வி.பி.துரைசாமி எச்சரித்தார்.