ரமலான் வழிபாடுகளை பாதிக்காதவாறு பொது முடக்கத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

ரமலான் வழிபாடுகளை பாதிக்காதவாறு பொது முடக்கத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொராணா தொற்றின் இரண்டாவது அலை பரவுவதால் தமிழக அரசு மீண்டும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது . மக்களின் உயிர் காக்கும் நடவடிக்கைகளை எடுப்பது தவிர்க்க இயலாதது என்பதால் இதை வரவேற்கிறோம். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதே சமயம் வழிபாட்டுத்தலங்களுக்கு சில விலக்குகள் தேவை என்பதையும் தமிழக அரசு உணர வேண்டும். வழிபாட்டு மையங்கள் என்பது மக்கள் மன அமைதி பெறும் இறையில்லங்களாக இருப்பதால் அங்கு மக்கள் கட்டுப்பாடுகளுடன் வந்து செல்வதற்கு சில சலுகைகளை அளிக்க வேண்டும். கோயில், மசூதி, தேவாலயம் என மக்கள் கூடி பிரார்த்திக்கும் இடங்களில் நேரக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்.

குறிப்பாக புனித ரமலான் மாதம் இம்மாதத்தின் இரண்டாவது வாரத்தில் தொடங்குவதால், மக்கள் இரவு நேர வழிபாட்டை நடத்தும் வகையில் இரவு 10 மணி வரை மசூதிகள் திறந்திருக்க அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இதற்கு மக்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை அரசு வெளியிடலாம். இதை எல்லோரும் பின்பற்றுவார்கள் என்பதில் ஐயமில்லை.இதே போன்று எல்லா மதங்களையும் சேர்ந்த மக்களின் நியாயமான கோரிக்கைகளையும் ஆன்மீக காரணங்களுக்காக பரிசீலிக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.